Nithyananda released new video about abducted women case : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் முறையான அனுமதி இல்லாமல் ஆசிரமம் நடத்தி வந்திருக்கிறார் நித்தியானந்தா. பெங்களூர் பீடத்தில் ஆன்மீக கல்விக்காக அனுப்பப்பட்ட தன்னுடைய நான்கு குழந்தைகளை நேரில் பார்க்க ஜனார்தன ஷர்மா என்பவர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த நான்கு நபர்களையும் குஜராத்தில் இருக்கும் ஆசிரமத்திற்கு, பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் அழைத்து சென்றது வெட்ட வெளிச்சமானது. பின்னர் ஜனார்தன ஷர்மா அளித்த புகாரின் அடிப்படையில் இளைய பிள்ளைகள் இருவரையும் மீட்டனர் காவல்துறையினர்.
ஜனார்தன ஷர்மாவின் மூத்தமகள் லோபமுத்திரா மற்றும் இரண்டாவது மகள் நந்தித்தா என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நந்திதா தன்னுடைய விருப்பத்தின் பேரில் தான் நான் வெளியே இருப்பதாக அறிவித்திருக்கிறார், நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நித்தியானந்தா வெளிநாடு தப்பிச்சென்றதாக பல தகவல்கள் வெளியாகின.
"நான் தற்போது இமயமலையில் இருக்கின்றேன். மிகப்பெரிய ஆன்மிக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிருடன் இருக்க வேண்டும். பரமசிவனும், காலபைரவரும், மகா காளியும் அதனை விரும்புகிறார்கள். என்னுடைய குருக்குலங்கள் அனைத்தும் திறந்தே தான் இருக்கிறது. ஆசிரமத்தில் குழந்தைகளை வந்து பெற்றோர்கள் சந்திப்பதற்கு அனுமதி எப்போதும் மறுக்கப்பட்டதே கிடையாது. இந்தியாவில் நீதி கிடைக்க நிறைய காலமாகும். அதற்கு அதிக பணம் செலவாகும்.
கைது செய்யப்பட்டுள்ள அகமதாபாத் ஆசிரம நிர்வாகிகளை காலபைரவர் காப்பாற்றுவார். என் மீது பாய வந்த வில்களை தாங்கிக் கொண்டுள்ளனர் அந்த பெண்கள். என் மீதும் என் ஆசிரமம் மீதும் தொடர்ந்து குற்றங்கள் சுமத்தப்பட்டு தான் வருகிறது. இருப்பினும் நான் ஆன்மீக பணிகளை தொடருவேன். இந்து மதத்தை எதிர்ப்பவர்கள், இந்த நாட்டினை எதிர்பவர்கள் எனக்கு எதிராக இந்த சந்தித்திட்டத்தில் இறங்கியுள்ளனர்” என்று தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். நித்தியானந்தா தற்போது இமயமலையில் இருக்கிறார். தானும் தன்னுடைய சீடர்களும் அமைதியாக ஆன்மீக பணிகளை மேற்கொள்ள காணி நிலம் கொடுங்கள் என்றும் வீடியோவில் பேசியுள்ளார்.