2024 மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து சந்திக்க தயாராகிவருகின்றன. இதற்கான கூட்டம் பெங்களூருவில் 2 நாள்கள் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமாரின் மௌனம் பெரிதாக பேசப்பட்டது. இரண்டு நாள்கள் மாநாடு நடந்த விதம் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்த யூகங்களுக்கு அவர் புதன்கிழமை முற்றுப்புள்ளி வைத்தார். அவர், பாட்னாவில் கூடிய 15 பேரில் இருந்து 26 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டத்தில் அனைவரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. இதனால்தான் கூட்டம் முடிந்த உடன் வெளியேறினேன். மற்றபடி கூட்டம் மகிழ்ச்சியாக இருந்தது.
பாட்னாவில் 15 கட்சிகள்தான் இருந்தன. ஆனால் பெங்களூருவில் 26 கட்சிகள் உள்ளன என்றார். தொடர்ந்து கூட்டணிக்கு இந்தியா எனப் பெயரிட்டது குறித்து கேட்டதற்கு, “இது பாரதிய ஜனதாவுக்கு எதிரான கூட்டணி.
அவர்கள் தங்கள் கட்சியில் 36 கட்சிகள் உள்ளதாக கூறுகின்றார்கள். அந்தக் கட்சிகளின் பெயர்களை கூற முடியுமா?
தற்போதைய என்டிஏ கூட்டணி அடல் ஜி காலத்து கூட்டணி கிடையாது. இப்போது என்ன நடக்கிறது என்பதுதான் உங்களுக்கே தெரியுமே என்றார்.
மேலும், இந்தியா கூட்டணிக்கு நீங்கள் ஒருங்கிணைப்பாளரா? என்ற கேள்விக்கு மும்பையில் அடுத்த கூட்டத்தின்போது அது முடிவு செய்யப்படலாம் என்றார்.
தொடர்ந்து, பெங்களூருவில் பீகார் முதல்வருக்கு உரிய மரியாதை அளிக்கப்படாததால் வருத்தம் அடைந்துள்ளதாக பாஜக ராஜ்யசபா எம்பி சுஷில் குமார் மோடி கூறியதை நிதீஷ் கடுமையாக சாடினார்.
அப்போது, பெங்களூருவில் சுஷில் குமார் இருந்தாரா? எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்கிடையில், ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் தலைவர் ஒருவர், “விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதால் முன்கூட்டியே அங்கிருந்து வெளியேறினோம்” என்றார்.
எனினும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் சுபோத் குமார் மேத்தா கூறுகையில், “கூட்டணியின் முன்னேற்றத்தால் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதை இந்தியா என்று அழைப்பதன் மூலம், பாஜகவின் குறுகிய இந்தியா என்ற கருத்தை நாங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளோம், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற எங்கள் கருத்தை முன்வைத்துள்ளோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“