பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான இடங்களை பெற்றுள்ளது. நிதீஷ்குமார் பீகாரின் அடுத்த முதல்வராக இருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பம் என்று பாஜக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், ஜே.டி (யு) குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளதால், நிதீஷ்குமார் தனக்கு முதல்வராவதில் விருப்பமில்லை என்பதை வெளியிப்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
இருப்பினும், பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரை முதல்வராக தொடர வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அரசாங்கத்தை நடத்துவதில் அவருக்கு முன்பு போலவே முழு சுதந்திரம் இருக்கும் என்று உறுதியளித்ததாகத் தெரிகிறது.
“மக்கள் மிகவும் முக்கியமானவர்கள்” என்று நிதீஷ் குமார் புதன்கிழமை மாலை டுவீட் செய்தார். மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” என்று தெரிவித்தார்.
சிராக் பாஸ்வானும் அவரது லோக் ஜனசக்தி கட்சியும் (எல்.ஜே.பி) ஜே.டி.யுவை காயப்படுத்திய விதத்தில் நிதீஷ் மிகவும் வருத்தப்பட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “சிராக் குறைந்தபட்சம் 25-30 இடங்களில் ஜே.டி.யுவின் வாய்ப்புகளை கெடுத்துவிட்டார் என்று அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பாஜக இப்போது கூட்டணியில் மூத்த கூட்டணி கட்சியாக இருப்பதால் அவரை முதல்வராக இருக்குமாறு நாங்கள் அவரை வற்புறுத்தினோம்.” என்று கூறினார்.
பீகார் மாநில சட்டப்பேரவயில் உள்ள மொத்தம் 243 இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் பாஜக 74, ஜேடி(யு) 43, கூட்டணி கட்சிகளான விஐபி மற்றும் எச்.ஏ.எம் (எஸ்) தலா நான்கு இடங்களைப் பெற்றன.
ஒரு மூத்த ஜே.டி.(யு) தலைவர் தனது கட்சியில் பொது எண்ணம் இருப்பதாகக் கூறினார். பாஜக சிராக் பாஸ்வானை தேர்தல் பிரச்சாரத்தின் போது அவ்வளவு திறம்பட கையாளவில்லை. பாஜக மற்றும் ஜேடி(யு) தொண்டர்கள் இடையே ஒருங்கிணைப்பிலும் இடைவெளிகள் இருந்ததாக அந்த தலைவர் கூறினார்.
இது பல ஜே.டி.(யு) அமைச்சர்கள் மற்றும் சில ஏற்கெனவே அந்த தொகுடியில் பதவியில் இருந்த எம்.எல்.ஏக்களின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று அவர் கூறினார். உண்மையில், தலைவர்கள் கூறுகையில், ஜே.டி.(யு) அமைச்சர்கள் ஜெய் குமார் சிங் (தினாரா) தோல்விக்கு எல்.ஜே.பி காரணியாக பொறுப்பாக்க முடியும்; ஷைலேஷ்குமார் (ஜமல்பூர்); கிருஷ்ணந்தன் வர்மா (ஜெஹனாபாத்); ராம்சேவக் சிங் (ஹதுவா); சந்தோஷ் நிராலா (ராஜ்பூர்), குர்ஷீத் ஆலம் (சிக்தா). ஆகியோரின் தோல்விக்கு எல்.ஜே.பி-யை பொறுப்பாக்க முடியும் என்று கூறினார்.
இந்த முறை ஜே.டி.(யு) வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 71 ல் இருந்து 43 ஆக குறைந்தது. 2005 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சியின் மோசமான செயல்திறனாக உள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை, பீகார் பாஜக மூத்த பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ், பீகார் பாஜக தலைவர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் நிதீஷ் குமாரை சந்தித்தனர்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனால் ஜே.டி.யுவில் பலர் இதை கட்சி வீழ்ச்சியடைந்த நேரத்தில் பாஜக வந்துள்ளதாக பார்க்கின்றனர்.
புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா தீபாவளிக்கு பின்னர் நடைபெறும். இதற்கிடையில், அமைச்சரவையில் இலாகாக்களை பெறுவது பற்றி கட்சி கவனம் செலுத்துவது இயற்கையானது” என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜக கல்விதுறை அல்லது முக்கியமான அமைச்சர் பதவியான உள்துறையை கேட்கலாம் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த துறைகள் இது இதுவரை ஜே.டி.(யு)-விடம் இருந்தது.
இதற்கிடையே நிதிஷ்குமாரை பாஜக சமரசம் செய்துவிட்டதாகவும், திங்கட்கிழமை அவர் முதல்வர் பதவியை ஏற்பார் என்றும் தகவல்கள் வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook