பிகாரில் பாரதிய ஜனதா உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று (ஆகஸ்ட் 09) தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பாகு சௌகானிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி இல்லத்தில் இரண்டாவது முறையாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்வை சந்தித்து அவரின் ஆதரவுடன் ஆட்சியமைக்க மீண்டும் ஆளுநர் பாகு சௌகானை சந்தித்து ஆதரவு கோரினார்.
2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. அந்தத் தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி 125 இடங்களில் வென்றது.
பாரதிய ஜனதா 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் விகாஷீல் இன்சான் கட்சி மற்றும் மதசார்பற்ற இந்துஸ்தான் அவாம் கட்சி தலா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை கைப்பற்றியதால், இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது.
மாநிலத்தின் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் 110 தொகுதிகளில் வென்றிருந்தன.
அதிகப்பட்சமாக லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வென்றிருந்தது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், 29 தொகுதிகளில் போட்டியிட்ட இடதுசாரிகள் 16 தொகுதிகளிலும் வென்றிருந்தனர்.
அசாதுதீன் ஓவைசியின் கட்சி 5 இடங்களிலும் வென்றிருந்தது. இந்த நிலையில் மேலும் 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர். இதனால் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பலம் 79 ஆனது.
தற்போது மொத்தமுள்ள 242 தொகுதிகளில் பாஜக (77), ஐக்கிய ஜனதா தளம் (45), மதசார்பற்ற இந்துஸ்தான் அவாம் மோர்சா (4), ஆர்ஜேடி (79), காங்கிரஸ் (19), இந்திய கம்யூனிஸ்ட் (எம்-எல்) (12), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (4) மற்றும் சுயேச்சை ஒருவர் உள்ளனர்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஒரு உறுப்பினர் காலமாகிவிட்டார். அவரது இடம் காலியாக உள்ளது. மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 19.5 சதவீத வாக்குகளும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 15.4 சதவீத வாக்குகளும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 23.1 சதவீத வாக்குகளும், காங்கிரஸிற்கு 9.5 சதவீத வாக்குகளும் கிடைத்திருந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“