பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவாளராக இருப்பதாக தன்னை விமர்சித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
பீகாரில் நிதிஷ் குமார் கடந்த மாதம் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அம்மாநிலத்தில் 10வது முறையாக ஆட்சி அமைத்தார். இதனை பிரபல தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்தார். பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில், கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் மேற்கொண்ட ஆறாவது சோதனை என பதிவு செய்து இருந்தார்.
முன்னதாக நிதிஷ் குமார், "பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு பாஜகவுடன் இருப்பது தான் விருப்பமும் கூட. ஆனால், பிஹாரில் 2005க்குப் பின்னர் நாங்கள் என்னவெல்லாம் மேம்பாட்டுப் பணிகளை செய்துள்ளோம் என்று அவருக்கு தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் விளம்பரம், பிரச்சார உத்திகள். அதை மட்டும் வைத்துக் கொண்டு அவர் உள்ளூர் அரசியல் பற்றி உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் இதே பிகே என்னுடன் ஆதரவாளராக வந்தார். நான் அவர் பார்த்துவந்த தேர்தல் உத்தியாளர் வேலையைவிட்டுவிட்டு ஐக்கிய ஜனதா தளத்தில் முழுநேர தொண்டராக இணையுமாறு கூறினேன். முடியாது என்று பிரிந்து சென்றார். அப்புறம் நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளுக்கும் வேலை பார்க்க ஆரம்பித்தார். அரசியல் அவருக்குத் தொழில்" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் சில புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில், நிதிஷ் குமார், பாஜகவுடன் இணக்கமாக இருந்தபோது அவர் பிரதமருக்கு கும்பிடுபோட்ட படங்களைத் தொகுத்துப் பதிவிட்டிருந்தார். பின்னர் அதனை நீக்கிவிட்டார்.
ஆனால், அந்தப் படங்களுடன்ன், "பிஹாரில் முன்பு ஆளுங்கட்சியுடன் இருந்த நிதிஷ் குமார், இன்று எதிர்க்கட்சியுடன் கைகோத்துள்ளார். அவர் எவ்வளவுதூரம் நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்பதையே இன்னும் கணிக்க முடியவில்லை. ஆனால் பிஹாரில் இப்போது அமைந்துள்ள புதிய கூட்டணி தேசிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே எனது கணிப்பு" என்று கூறியுள்ளார்.