/tamil-ie/media/media_files/uploads/2018/07/2-29.jpg)
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் ட்ரைவிங் லைசன்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலமும் அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் படி, அரியானா மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 26 முதல் அம் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது.மேலும் பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக மாநில அரசு வழங்கயதைத் தவிர, மேலும் ஒரு வழக்குரைஞர் நியமிக்க விரும்பினால் அவருக்கு ரூ.22 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதம் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துவங்கியுள்ள இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.