இந்திய சிவில் பதிவு அமைப்பு வெளியிட்ட தரவில், 2020 ஆம் ஆண்டில் மருத்துவ சிகிச்சையை அணுகுவது மக்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை விவரிக்கிறது. அப்போது, பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 45 சதவீதம் பேருக்கு மருத்துவ பராமரிப்பு கிடையாது என்பது தெரியவந்துள்ளது. இது எப்போதும் இல்லாத அளவு மிகப்பெரிய சதவீதம் என கூறுகின்றனர்.
2020இல் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்கும் சமயத்தில், கொரோனா அல்லாத பிற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன. இந்தியாவில், பல மருத்துவமனைகளில் 80 முதல் 100 சதவீதம் படுக்கைகள் கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது. அதன் காரணமாக, கொரோனா இல்லாத நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கடினமானது.
மருத்துவ கவனிப்பு பெறாமல் இறக்கும் நபர்களின் விகிதம் 2019 இல் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 34.5 சதவீதமாத இருந்த நிலையில், 2020 இல் 45 சதவீதமாக அதிகரித்தது. இது,ஓராண்டில் மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும்.
அதே நேரத்தில், மருத்துவமனை சிகிச்சை பராமரிப்பின் கீழ் ஏற்படும் இறப்புகள் 2019 இல் 32.1 சதவீதமாக இருந்த நிலையில், 2020 இல் 28 சதவீதமாக குறைந்தது. இது இதுவரை இல்லாத அளவு கூர்மையான சரிவாகும்.
2 டேட்டாவை ஒப்பிடுகையில், மருத்துவ கவனிப்பு இல்லாமல் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவ சிகிச்சை பெற்று இறப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது தெரிகிறது.
2011 இல், பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 10 சதவீதம் மட்டுமே மருத்துவ பராமரிப்பு இல்லாததால் நிகழ்ந்தன. ஆனால், அப்போதைய காலக்கட்டத்தில் இறப்போர்களில் 70 சதவீதத்திற்கும் குறைவாகவே பதிவு செய்யப்படும். 2011இல் வெறும் 63 சதவீத மரணம் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
இறப்பு பதிவுகளின் அளவு அதிகரித்ததால், மருத்துவ நிறுவனங்களுக்கு வெளியே இறப்பு விகிதம் அதிகரிக்க தொடங்கியது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், நிறுவன இறப்புகளின் விகிதமும், மருத்துவ கவனிப்பு இல்லாதவர்களின் விகிதமும் சமமாக இருந்தது. ஒவ்வொன்றும் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் மூன்றில் ஒரு பங்காகும்.
2019இல், மருத்துவ பராமரிப்பு இல்லாத நிலையில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் விகிதம் நிறுவன இறப்புகளை விட அதிகமாக இருந்தது. இந்த போக்கு, தொற்றுநோய் காரணமாக 2020இல் மேலும் அதிகரித்தது. இந்த ட்ரெண்ட் தான், 2021 ஆம் ஆண்டிலும் நீடித்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான கோவிட் இறப்புகள் மருத்துவமனை பராமரிப்பு இல்லாமல் தான் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, பதிவாளர் ஜெனரல் அலுவலகம் செவ்வாயன்று வெளியிடப்பட்ட இந்திய சிவில் பதிவு அமைப்பு தரவில், 2020 ஆம் ஆண்டில் நாட்டில் 81.16 லட்சம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட ஆறு சதவீதம் அதிகமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.