மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் நடமாட்டத்திற்கும் சரக்கு போக்குவரத்திற்கும் எந்த தடையும் விதிக்க கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.
உள்ளூர் அளவில் மக்கள் நடமாட்டத்திற்கும் சரக்கு போக்குவரத்திற்கும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டிய மத்திய உள்துறை அமைச்சகம், அன்லாக் -3 அறிவிப்பில், ஜூலை 29ம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் நடமாட்டத்திற்கும் சரக்கு போக்குவரத்திற்கும் எந்த தடையும் விதிக்க கூடாது என்று மாநிலங்களுக்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது: “உள்ளூர் அளவில் மாவட்ட நிர்வாகத்தால் அல்லது மாநில அரசால் விதிக்கப்பட்ட இத்தகைய கட்டுப்பாடுகள் பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை மீறுவதாகும்.” என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதன் பெயரில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளை அடிக்கடி மூடி வருவதாகவும், இது நாடு முழுவதும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதாக உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், பல நினைவூட்டல்களை மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தாலும், பிரச்சினை நீடிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்கள் டெல்லியுடனான தங்கள் எல்லைகளை அடிக்கடி மூடி சீல் வைத்தன. அது தலைநகர் டெல்லிக்கு மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கு கடுமையான பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. தேசிய தலைநகர் டெல்லி அரசு மாநிலங்களுடன் நடத்திய கூட்டங்களையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டால் இந்த பிரச்சினை இறுதியாக தீர்க்கப்பட்டது. மேலும், தேசிய தலைநகர் டெல்லியில் கோவிட் -19 கட்டுப்படுத்தலுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தியது. இப்போது மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாநிலங்களின் எல்லைகளை, குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளை அடிக்கடி மூடி சீல் வைக்கின்றன. இந்த மாநிலங்கள் வழியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாததால் பிற மாநிலங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் சிக்கித் தவிப்பதால் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான மத்திய அரசின் முயற்சிகளை இது முழுவதுமாக தோற்கடிக்கிறது” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
உள்துறை செயலாளர் பல்லா சனிக்கிழமை எழுதியுள்ள தனது கடிதத்தில், அன்லாக் -3, ஜூலை 29 வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் 5வது பாராவைக் குறிப்பிட்டு மாநிலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில், “மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்துக்கும் எந்த தடையும் இருக்காது. அத்தகைய இயக்கங்களுக்கு தனி அனுமதி / ஒப்புதல் / இ-பாஸ் அனுமதி தேவையில்லை. அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களின் கீழ் தரைவழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கான நபர்கள் மற்றும் பொருட்களின் இயக்கமும் இதில் அடங்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பல்வேறு மாநிலங்களிலும்/மாவட்டங்களிலும் போக்குவரத்திற்கு உள்ளூர் அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் சரக்கு மற்றும் சேவைகளில் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் சிக்கல்களை உருவாக்கி, விநியோகச் சங்கிலியை பாதிக்கின்றன. இதன் விளைவாக பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு சீர்குலைந்து, சரக்கு மற்றும் சேவைகளின் விநியோகத்தை பாதிக்கிறது” என்று பல்லா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை உறுதி செய்ய மாநிலங்களை வழிநடத்துவதோடு அவற்றை கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.