வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய அம்சங்களைப் பற்றி முடிவெடுக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஏற்கனவே மாநிலங்களவையில் உறுப்பினராக இருப்பவர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள், அவர்களின் குடும்பத்தினர்/உறவினர்களுக்கு தேர்தலில் நிற்க சீட் வழங்கப்பட மாட்டாது, என ராகுல் காந்தி கண்டிப்புடன் தெரிவித்ததாக தெரிகிறது.
அதோடு, ஒவ்வொரு மாநிலத்தின் சூழலைப் பொறுத்து, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்பதை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களே, கட்சியின் மேலிடத்துக்கு தெரியப்படுத்தும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதோடு ஒவ்வொரு தொகுதிக்கும் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் தலா 3 பேர் அடங்கிய, பட்டியலை தயார் செய்து பிப்ரவரி 25-ம் தேதிக்குள் அனுப்பும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். ’இறுதி வேட்பாளர் பட்டியலை இம்மாத இறுதியில் தயாரிக்கும் பணியை காங்கிரஸ் மேலிடம் மேற்கொள்ளவிருக்கிறது, என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.
தவிர, ராகுலின் சகோதரி பிரியங்காவை தங்களது முக்கியத் தொகுதிகளில் பிரச்சாரத்திற்கு அனுப்பும்படி, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ்
தலைவர்கள் கேட்டுக் கொண்டார்களாம்.