பட்டினியால் 3 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மண்ணடவாலி பகுதியில் வசித்து வருபவர் ரிக்ஷா தொழிலாளி மங்கள் சிங். இவரது மனைவி பீனா மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு மான்ஷி (8), ஷிகா (4), பெரா (2) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மங்களின் ரிக்ஷா திருட்டுப்போயுள்ளது. இதனை தேடி ஓரிரு நாட்களில் வருவதாக தெரிவித்துவிட்டு கடந்த வாரம் சனிக்கிழமை வீட்டை விட்டு சென்றுள்ளார் மங்கள்.
இதைத் தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு, வீட்டின் உரிமையாளர் மங்கள் சிங் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, சிறுமிகள் சுயநினைவின்றி கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், சிறுமிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவர்களை சோதித்த மருத்துவர்கள், மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமிகளின் உடற்கூறாய்வில் சுமார் 7 நாட்களுக்கு மேலாக சிறுமிகள் உணவருந்தாமல் இருந்திருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களுக்கு பல ஆண்டுகளாக ஊட்டச்சத்து குறைபாடு இருந்துள்ளதும் தெரியவந்தது.
பட்டினியால் இக்குழந்தைகள் இறந்து போயுள்ளார்கள் என்று கருதிய நிலையில், தற்போது இந்த மரணத்தில் திடீர் திருப்பமாக, சிறுமிகளை விஷம் கொடுத்து அவரது தந்தை மங்கள் கொன்றவிட்டு, தலைமறைவாகி இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூத்த மகளின் வங்கிக் கணக்கில் ரூ. 1800 இருக்கையில் குழந்தைகள் இறக்க வாய்ப்பில்லை. குடும்பத்தை பராமரிக்க முடியாமல், சனிக்கிழமை இரவு சிறுமிகளுக்கு வெண்ணீரில் விஷ மருந்து கலந்துக் கொடுத்துவிட்டு, மங்கள் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.