உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரேபரேலி உஞ்சாஹரில் உள்ள தேசிய அனல்மின் நிலையத்தில் பிரமாண்ட கொதிகலன் எதிர்பாராதவிதமாக, பலத்த சத்தத்துடன் வெடித்தது. மின் நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினர். விபத்தில், 16 தொழிலாளர்கள் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அனல்மின் நிலையத்தில் சில உடல்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொதிகலன் வெடித்ததும் தீ விபத்தும் நேரிட்டு உள்ளது. தொழிலாளர்கள் தீக்காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள், அடையாளம் கண்டறிய முடியாத அளவுக்கு கருகிவிட்டன. காயம் அடைந்தவர்களில் 4 அதிகாரிகளும் அடங்குவர். உடனடியாக மீட்புப்பணி தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு படை குழு, லக்னோவில் இருந்து சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிக அழுத்தம் காரணமாக, கொதிகலனின் கழிவு சாம்பல் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் 3 நாள் பயணமாக மொரிசியஸ் சென்றுள்ளார். விபத்து குறித்து அவருக்கு தகவல் சொல்லப்பட்டது. உடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், தன்னுடைய முதன்மை செயலாளர் மூலமாக மீட்பு பணிகளை துரித படுத்த உத்தரவிட்டார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், அதிக காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசாக காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ரேபரலி தொகுதி எம்பியும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியாகாந்தி, விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்பட்டுத்தியுள்ளார். மேலும் விபத்தி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு விரைவாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.