ஒடிஷாவில் திருமணத்திற்கு வந்திருந்த அன்பளிப்பில் இருந்த வெடிகுண்டு வெடித்து புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்கு ஒடிசாவில் உள்ள பாட்நகரை சேர்ந்த சௌம்யா சேகர் மற்றும் ரீமா சாஹூ ஆகியோருக்கு கடந்த 18-ஆம் தேதி திருமணமானது. இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் தம்பதிகள் இருவரும் திருமணத்திற்கு வந்திருந்த அன்பளிப்புகளை திறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிஃப்ட் பாக்ஸை திறந்தபோது, அதிலிருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில், புதுமாப்பிள்ளை சௌம்யா சேகர் பலியானார். மேலும், அவரது பாட்டி ஜெமாமஹூவும் (85) பலியானார். அவரது மனைவி ரீமா, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த கிஃப்ட்டில் யாருடைய பெயரும், முகவரியும் குறிப்பிடப்படவில்லை எனவும், அதனை திறந்தவுடனேயே வெடிகுண்டு வெடித்துவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபகுதியை சேர்ந்த ஒருவர்தான் இந்த பரிசை அனுப்பியிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.