Sujit Bisoyi
ஒடிசாவின் பாலசோரில் ஜூன் 2 அன்று நடந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ, சோரோ பிரிவின் கீழ் பணிபுரியும் ரயில்வே சிக்னல் ஜூனியர் இன்ஜினியர் ஒருவரை விசாரித்து, அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய ஏஜென்சியான சி.பி.ஐ-ன் ஐந்து பேர் கொண்ட குழு திங்கள்கிழமை அதிகாலை ஜூனியர் இன்ஜினியரின் வீட்டிற்குச் சென்று சீல் வைத்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்: கழுத்தில் கயிறு கட்டி நாய் போல குரைக்க வைத்த கொடூரம்; மத்திய பிரதேசத்தில் 3 பேர் கைது, வீடுகள் இடிப்பு
விபத்து நடந்ததில் இருந்து வீடு பூட்டியே இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
“சி.பி.ஐ அதிகாரிகள் ஆதாரங்களை சேகரிப்பதற்காக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் ரயில் விபத்து நடந்ததில் இருந்து ரயில்வே அதிகாரிகள் யாரும் பணிக்கு வராமல் இல்லை. விசாரணைக்கு சி.பி.ஐ.,யால் சம்மன் அனுப்பப்பட்டவர்களும் விசாரணையில் இணைவார்கள்” என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், “சி.பி.ஐ குழு ஜூனியர் இன்ஜினியரை மேலதிக விசாரணைக்காக அவரது வீட்டிற்கு அழைத்து வர வாய்ப்புள்ளது, இதனால் அவர்கள் வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். ஜூனியர் இன்ஜினியர் வீடு முன்னிலையில் திறக்கப்படும்” என்று கூறினார்.
பாலசோர் காவல்நிலையத்தில் அரசு ரயில்வே காவல்துறை பதிவு செய்த முதல் எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் ஜூன் 6ஆம் தேதி ரயில் விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கியது.
பஹானாகா பஜார் ரயில் நிலையத்தில் உள்ள ரிலே அறை, பேனல் மற்றும் பிற உபகரணங்களுக்கு ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக சி.பி.ஐ முன்னதாக சீல் வைத்தது. பஹானாகா பஜார் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உட்பட பல ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய அவர்கள், மூன்று ரயில்களின் மோதலுக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அவர்களின் மொபைல் போன்கள், விபத்துக்கு முன்னும் பின்னும் பதிவு புத்தகம் மற்றும் டிஜிட்டல் பதிவுகளை பதிவு அறையில் இருந்து தடயவியல் பரிசோதனைக்காக கைப்பற்றினர், என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன் 2 அன்று, சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பாலசோரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டலின் சில பெட்டிகள் மீது தடம் புரண்டது. இந்த விபத்து 292 உயிர்களைக் கொன்றது, 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மீட்பு, நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளில் உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்கிழமை பஹானாகாவிற்கு வருகை தர உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil