scorecardresearch

திருமண வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டியது சமூகமே; அரசாங்கம் அல்ல – ஆர்எஸ்எஸ்

திருமண வயது குறித்த முடிவில் அரசுடன் முரண்படுகிறோம்; ஹிஜாப் பிரச்சனை உள்ளூர் மட்டத்தில் சரி செய்யப்பட்டிருக்க வேண்டும்; ஆர்எஸ்எஸ் கருத்து

திருமண வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டியது சமூகமே; அரசாங்கம் அல்ல – ஆர்எஸ்எஸ்

Deeptiman Tiwary 

On marriage age, RSS not with Govt: Social, not legal: பெண்களின் திருமண வயது குறித்து அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்னைகளில் முடிவெடுப்பதை சமூகத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தனது உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பின் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக தெளிவுபடுத்தியுள்ளது. ஹிஜாப் சர்ச்சை நாடு முழுவதும் பெரிதாக்கப்பட்டதாகவும், உள்ளூர் மட்டத்தில் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் கருதுகிறது.

மார்ச் 11-13 வரை அகமதாபாத்தில் நடைபெறும் அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏபிபிஎஸ்) கூட்டத்தின் போது, ​​மற்ற சமகாலப் பிரச்சினைகளுடன் இந்த இரண்டு விஷயங்களும் விவாதிக்கப்படும் என்று ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏபிபிஎஸ் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கூட்டத்தை நடத்தி, இதுவரையிலான அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் எதிர்கால செயல்பாடுகள் குறித்த நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறது. கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அனைத்து உயர்மட்ட தலைவர்களும், நாடு முழுவதும் உள்ள பிராந்தியங்களின் பிரதிநிதிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தொடர்புடைய அமைப்புகளும் கலந்து கொள்கின்றனர்.

“திருமண வயது பிரச்சினை விவாதத்தில் உள்ளது. பல கருத்துக்கள் உள்ளன. பழங்குடியினரிடையே அல்லது கிராமப்புறங்களில், திருமணங்கள் முன்கூட்டியே நடக்கும். அரசாங்கத்தின் வாதம் கல்வி (கல்வியை இது தடுக்கிறது) மற்றும் (இதன் விளைவாக) குறைவான வயதில் கர்ப்பம் குறித்தானது. ஆனால், அதை நிறைவேற்றுவதில் அரசு கூட அவசரப்படுவதாகத் தெரியவில்லை. இதுபோன்ற விஷயங்களில் அரசு எந்த அளவுக்கு தலையிட வேண்டும் என்பதுதான் கேள்வி. சில விஷயங்களை சமூகத்திடம் விட்டுவிட வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

அனைவரின் திருமண வயதை 18 ஆகக் குறைக்க அரசாங்கத்துடன் கருத்துக்கள் பகிரப்பட்டதாகவும், ஆனால் சில சமூக அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூடுதல் விவாதத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையும் படியுங்கள்: அம்பேத்கர் பற்றிய பிரமாண்ட இசை நிகழ்ச்சி; டெல்லியில் பிப்.25 முதல் ஆரம்பம்

திருமண பலாத்கார விவகாரத்தில் சங்கம் இதே கருத்தைக் கொண்டுள்ளது என்றும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை குடும்பத்தினரிடம் விட்டுவிட வேண்டும் என்று கருதுவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

நவீன பொருளாதார நிர்ப்பந்தங்கள் மற்றும் மேற்கத்திய செல்வாக்கு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகக் கூறுப்படும் நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் விதமாக குடும்பப் பிணைப்புக் கலாச்சாரத்தைப் புதுப்பிக்கும் RSSன் நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு எதிரான இரட்டைப் பிரச்சனைகள் இவை என்று RSS கருதுகிறது. குடும்பம் பிரபோதன் என்ற திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்துகிறது, அது குடும்பத்தை சமூகத்தின் மிக முக்கியமான அலகாகக் கொண்டுள்ளது மற்றும் ஒரு வாரத்தில் ஒரு நாளையாவது தங்கள் பெரிய (கூட்டுக்) குடும்பத்துடன் செலவிடவும் ஒன்றாக சாப்பிடவும் மக்களை ஊக்குவிக்கிறது.

“இவை பற்றி அரசியல் விவாதம் கூடாது, மாறாக சமூக விவாதம் வேண்டும். ஆதரவற்ற சமூகங்கள் தான் எல்லாவற்றிற்கும் சட்டங்களைக் கோருகின்றன. வலிமையான சமூகங்களை பொறுத்தவரை அச்சமூகமே இதற்கான தீர்வுகளை காண வேண்டும். குறைந்த அரசாங்க அதிகாரத்தில் ஆட்சி மேம்படும் என்றால், சமூகமும் மேம்படும்,” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார்.

வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக கர்நாடகாவில் சமீபகாலமாக எழுந்த சர்ச்சைகள் நாடு தழுவிய பிரச்சனையாக பெரிதாக்கப்பட்டதாக சங்கம் கருதுகிறது. “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தனது செல்வாக்கு மண்டலத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக நாங்கள் இதைப் பார்க்கும்போது, ​​இந்த விவகாரம் உள்ளூர் மட்டத்தில் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அதனால்தான் சங்கம் இந்த விஷயத்தை வலியுறுத்தவில்லை. ஆனால், தொடர்ந்து மத அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான வழிகளைக் கொண்டு வருவது நல்லதல்ல என்பதும் உண்மைதான்,” என்று அந்த தலைவர் கூறினார்.

இந்த மூன்று நாள் ஏபிபிஎஸ் கூட்டத்தில் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். “இவை முறையான தீர்மானங்களில் இடம் பெறுமா என்று சொல்ல முடியாது, ஆனால் கூட்டத்தின் போது பல விஷயங்கள் முறைசாரா முறையில் விவாதிக்கப்படுகின்றன,” என்று அந்த தலைவர் கூறினார்.

2019 இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) குறித்த விதிகளை அரசாங்கம் இன்னும் உருவாக்கவில்லை என்றாலும், RSS அமைப்பு, CAA மற்றும் நாடு முழுமைக்குமான தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய இரண்டிலும் உறுதியாக இருப்பதாகவும், அவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

2025ல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு விழாக்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதால், இந்த ஆண்டு சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. “அமைப்பின் விரிவாக்கம் குறித்த திட்டங்கள் தவிர, நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். நாம் மண்டல் கமிஷன் மட்டத்தை அடைய வேண்டும், இன்னும் அதிகமான மக்களை எங்களுடன் இணைக்க வேண்டும் மற்றும் இதுவரை இல்லாத இடங்களில் எங்கள் சுயம் சேவகர்கள் இருக்க வேண்டும்,” என்று அந்த தலைவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் இன்று நாட்டில் 55,000 தினசரி ஷாகாக்களையும், பொதுமக்களுக்குச் செல்லும் திட்டங்களையும் கொண்டுள்ளது. இதை 1 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை சென்றடைவதற்காக, இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இரவு ஷாகாக்கள் மற்றும் வாராந்திர கூட்டங்களையும் ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: On marriage age rss not with govt social not legal