/indian-express-tamil/media/media_files/2025/05/07/rOxjOTrlt3BXAb5mUcZd.jpg)
ஆபரேஷன் சிந்தூர்: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் மீது இந்தியா சரமாரி தாக்குதல்
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாக். மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டுவந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிகாலை 1.05 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவில் நடத்தப்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விளக்கப்படம் திரையிடப்பட்டது. அதில் 2001-ல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல், 2002-ல் நடந்த அக்ஷர்தாம் கோவில் தாக்குதல், 2008-ல் நடந்த மும்பை தாக்குதல், 2016-ல் நடந்த உரி தாக்குதல், 2019-ல் நடந்த புல்வாமா தாக்குதல் மற்றும் கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதல் ஆகியவை திரையிட்டு காட்டப்பட்டன.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் சுமார் 250-க்கும் அதிகமான இந்திய மக்கள் உயிரிழந்துள்ளனர், 800-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றும், 600-க்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 1,400-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக கர்னல் சோபியா குரேஷி அளித்த விளக்கத்தில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதில் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் பயிற்சி பெற்ற முரிட்கேவும் அடங்கும். எந்த பாகிஸ்தான் ராணுவ நிலையையும் குறிவைக்கவில்லை, இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் கர்னல் குரேஷி, பயங்கரவாத முகாம் மீதான நடவடிக்கை துல்லியமான திறன் மற்றும் தொழில்நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்துவதன் மூலமும், போர்க்கப்பல்களை கவனமாக தேர்ந்தெடுப்பதன் மூலமும் மேற்கொள்ளப்பட்டது என்றனர். கர்னல் குரேஷி மற்றும் விங் கமாண்டர் சிங் ஆகியோர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களின் தாக்குதல்களின் காட்சிகள் மற்றும் வரைபடங்களுடன் விரிவான விளக்கக்காட்சியை வழங்கினர்.
ஆபரேஷன் சிந்தூருக்கான இலக்குகள் "நம்பகமான உளவுத்துறை தகவல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்த வசதிகளின் பங்கை அடிப்படையாகக் கொண்டவை" என்று கர்னல் குரேஷி கூறினார். "பொதுமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களின் உயிர் இழப்பைத் தவிர்ப்பதற்காகவும் இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.
“3 தசாப்தங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன, அவை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் பரவியுள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி வழங்குவதற்காக, இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது, இதில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது;-
"லக்ஷர்-இ-தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் கடந்த ஏப்.22-ந்தேதி பஹல்காமில் மோசமான தாக்குதலை நடத்தினர். இதில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மும்பை தாக்குதலுக்கு பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும். அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே நெற்றியில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத ரீதியான மோதலை தூண்ட வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால் இந்திய அரசு மற்றும் இந்திய மக்களால் பயங்கரவாதிகளின் எண்ணம் நிறைவேறவில்லை. டி.ஆர்.எப். அமைப்பு ஐ.நா.வால் தடை செய்யப்பட்டுள்ள லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் அங்கமாக இருக்கிறது. பஹல்காம் தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது பற்றிய தெளிவான உளவு தகவல்களை நாம் சேகரித்துள்ளோம்.
தங்கள் நாட்டில் பயங்கரவாதமே இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறுவது பொய் என்பதற்கான ஆதாரம் உள்ளது. பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்த வேண்டியது அவசியம். 15 நாட்கள் கடந்தும், அதன் பகுதியில் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புக்கு எதிராக பாகிஸ்தானிடமிருந்து எந்த வெளிப்படையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவிற்கு எதிரான மேலும் தாக்குதல்கள் வரவிருப்பதாக எங்கள் உளவுத்துறை சுட்டிக்காட்டியது.
எனவே இன்று அதிகாலையில், இதுபோன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியா தனது எதிர்வினையாற்றும் உரிமையைப் பயன்படுத்தியது. பாகிஸ்தானில் 4 இடங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் காஷ்மீர் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஏப்.25 அறிக்கையை நினைவு கூர்ந்த அவர், "இந்த கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயலின் குற்றவாளிகள், அமைப்பாளர்கள், நிதியுதவியாளர்களை பொறுப்புக்கூற வைத்து அவர்களை நீதிக்கு முன் கொண்டு வர வேண்டியதன் அவசியம்" என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.