தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ 10 கோடி, அவரை உயிரோடு கொளுத்தினால் ரூ 1 கோடி என பத்மாவதி படப்பிரச்னையில் இந்துத்வா அமைப்புகள் மிரட்டுகின்றன.
தீபிகா படுகோனே, பாலிவுட்டில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத நடிகை! லேட்டஸ்டாக, ‘பத்மாவதி’ படத்தின் மூலமாக பரபரப்பின் மையமாக மாறியிருக்கிறார் தீபிகா படுகோனே!
தீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ந்தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர்.
தீபிகா படுகோனேவுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நீடித்த நிலையில், மிரட்டலும் விடுக்கப்பட்டது. ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு இதை பாராட்டியிருக்கிறார். அத்துடன் தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என கூறியிருக்கிறார். இதேபோல மிரட்டல்கள் தொடர்கின்றன.
தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதீய சத்ரிய மகாசபா அமைப்பை சேர்ந்தவர்கள் பத்மாவதி படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
தீபிகா படுகோனே, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தினர். பின்னர், கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் அந்த அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர்சிங் பேசுகையில், ‘நடிகை தீபிகா படுகோனேவை உயிரோடு கொளுத்துபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.
‘தீபிகா படுகோனேவுக்கு ராணி பத்மாவதியின் தியாகம் தெரியாது. உயிருடன் கொளுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த பரிசை அறிவிக்கிறோம்’ என்று புவனேஸ்வர்சிங் பேசியிருக்கிறார். அடுத்தடுத்து இந்த விவகாரம் வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.