பஹல்காமில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் அரசு பள்ளத்தாக்கில் சுமார் 50 சுற்றுலா தலங்கள் மற்றும் மலையேற்றப் பாதைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக மூட முடிவு செய்துள்ளது.
போதுமான பாதுகாப்பு இல்லாததால் மூடப்பட்ட இடங்களுள் குரேஸ் பள்ளத்தாக்கு, தோடாபத்திரி, வெரிநாக், பங்காஸ் பள்ளத்தாக்கு மற்றும் யூஸ்மார்க் போன்ற பிரபலமான ரிசார்ட்டுகளும் அடங்கும்.
கடந்த செவ்வாய்க்கிழமை பஹல்காமில் நடந்த தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் நபரும் உயிரிழந்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த இடங்களை மூட அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ள சுற்றுலா தலங்கள் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
மூடப்பட்ட இடங்களில் ஒன்றான குரேஸ், பந்திபோரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) அருகே அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது கடந்த பத்தாண்டுகளில் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஸ்ரீநகர் நகரத்திற்கு மிக அருகில் - வெறும் 45 கி.மீ தொலைவில் இருந்ததால், விருப்பமான சுற்றுலாத் தலமாக வளர்ந்து வந்த தோடாபத்திரியும் மூடப்பட்டுள்ளது.
வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள பங்காஸ் பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வெரினாக் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன.
சில காலத்திற்கு முன்பு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டிருந்த உரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் அமைந்திருக்கும் கமான் போஸ்ட்டும் இப்போது மூடப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக இருந்தது.
தெற்கு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் உள்ள உயரமான ஏரியான கௌசர்நாக் ஏரியும் மூட அரசு முடிவு செய்துள்ளது. கௌசர்நாக், சாகச சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களிடையே பிரபலமான மலையேற்றப் பாதையாகும்.
ஸ்ரீநகரில், பழைய நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜாமியா மஸ்ஜித் எனப்படும் பெரிய மசூதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சுற்றுலா தலங்களுக்கு வெளியே போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் சோதனைச் சாவடிகளை அமைத்து, குறிப்பிட்ட பகுதிகளுக்கு அப்பால் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஹல்காம் மற்றும் குல்மார்க் போன்ற பிரபலமான இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருந்தாலும், இந்த இடங்களுக்குள் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read in English: Gurez, Verinag among 50 Kashmir locations closed for tourists following Pahalgam attack