பாகிஸ்தானில் இருந்து வான் மற்றும் தரை வழிகள் மூலம் வரும் அனைத்து வகையான அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை இந்த சேவைகளை நிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
பகல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில், தீவிரவாதத்தையும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் எதிர்த்து உறுதியான நடவடிக்கை எடுப்பதில் நாடு உறுதியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். அங்கோலா அதிபர் ஜோவா மானுவல் கோன்கால்வ்ஸ் லௌரென்கோவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திய சிறிது நேரத்திலேயே பிரதமர் மோடியின் இந்த வார்த்தைகள் வந்துள்ளன. தனது அறிக்கையில், இந்தியாவும் அங்கோலாவும் வளர்ச்சியில் கூட்டாளிகள் என்றும், உலகளாவிய தெற்கின் தூண்கள் என்றும் பிரதமர் கூறினார்.
இந்திய அரசு அனைத்து பாகிஸ்தான் கொடி பொருத்தப்பட்ட கப்பல்களும் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்து சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துறைமுக அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், எந்தவொரு இந்தியக் கப்பலும் பாகிஸ்தான் துறைமுகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிகளுக்கும் தடை விதித்தது, இது இருதரப்பு உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் எடுக்கப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையாகும்.
பஹல்காம் போன்ற தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா சனிக்கிழமை தெற்கு காஷ்மீரின் ஹாபட்னாரில் உள்ள குதிரை வண்டி ஓட்டுநர் அடில் ஹுசைன் ஷாவின் இல்லத்திற்கு சென்றார். ஏப்ரல் 22 படுகொலையில் உயிரிழந்த 26 பேரில் இவரும் ஒருவர். முன்னேற்றம் மற்றும் செழிப்பிற்காக பஹ்ல்காம் போன்ற தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும், இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் "நரகத்தில் அழுகிப் போவார்கள்" என்றும் அவர் கூறினார்.
இந்தியாவுடனான பதற்றமான உறவுகளுக்கு மத்தியில் அப்தாலி ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்தது. பாகிஸ்தான் சனிக்கிழமை அப்தாலி ஆயுத அமைப்பின் வெற்றிகரமான பயிற்சி ஏவுதலை நடத்தியதாக அறிவித்தது. இது 450 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் மேற்பரப்பிலிருந்து மேற்பரப்புக்கு செல்லும் ஏவுகணையாகும். அண்டை நாடான இந்தியாவுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. “படைகளின் தயார்நிலையை உறுதி செய்வதையும், ஏவுகணையின் மேம்பட்ட வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட சூழ்ச்சி திறன் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப அளவுருக்களை சரிபார்ப்பதையும் இந்த ஏவுதல் நோக்கமாகக் கொண்டது” என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “எக்சர்சைஸ் இண்டஸ்” என்ற பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக ராணுவம் கூறியது, ஆனால் பயிற்சி குறித்த விவரங்களை வெளியிடவில்லை பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு உடனடி தடை விதித்து வர்த்தக அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் இதற்கான ஒரு விதி சேர்க்கப்பட்டுள்ளது. “பாகிஸ்தானில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதி அல்லது போக்குவரத்து உடனடியாகவும் மேலும் உத்தரவுகள் வரும் வரை தடை செய்யப்படுகிறது” என்று மே 2 தேதியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், "பொருத்தமான" நேரத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கோரிக்கை விடுக்க பாகிஸ்தானுக்கு "உரிமை" இருப்பதாக வெள்ளிக்கிழமை கூறியது. "ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையின் பின்னணியில் இவை அனைத்தும் நடப்பதாக நாங்கள் பார்க்கிறோம்," என்று பாகிஸ்தானின் ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஆசிம் இப்திகார் அகமது செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது அகமது இவ்வாறு கூறினார்.