பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை போன்ற விவரங்களை சரி பார்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: No coercive action till decision is taken: SC on plea by Srinagar man facing deportation along with family
நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆவணங்கள் மற்றும் பிற தொடர்புடைய உண்மைகளைச் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், "எந்தவொரு காலக்கெடுவையும் நாங்கள் குறிப்பிடவில்லை என்றாலும், விரைவில் பொருத்தமான முடிவு எடுக்கப்பட வேண்டும்" என்றும் கூறினர்.
"உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னர், பொருத்தமான முடிவு எடுக்கப்படும் வரை எந்த விதமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளக் கூடாது" என்று நீதிமன்றம் கூறியது. இதற்கான இறுதி முடிவில் மனுதாரர் அதிருப்தி அடைந்தால் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதை ஒரு முன்னுதாரணமாகக் கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.
மனுதாரர் அகமது தாரிக் பட் என்பவர், தனது குடும்பத்தினருடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூரிலிருந்து 1997 இல் ஸ்ரீநகருக்கு குடிபெயர்ந்ததாகக் கூறினார்.
அவர் ஒரு இந்திய குடிமகன் என்றும், அவரது குடும்பத்தில் அவருடைய தந்தை, தாய், மூத்த சகோதரி மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர் என்றும் கூறினார்.
1997 ஆம் ஆண்டு வரை தனது குடும்பம் மிர்பூரில் வசித்தனர் என்றும், அப்போது அவரது தந்தை ஜம்மு-காஷ்மீர் தலைநகருக்கு குடிபெயர்ந்தார் என்றும் பட் கூறினார். அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் 2000 ஆம் ஆண்டில் அங்கு குடிபெயர்ந்தனர். மேலும், அவரது உடன்பிறந்தவர்கள் ஒரு தனியார் பள்ளியில் படித்தனர்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்ததாகவும், இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பியதாகவும் பட் கூறினார்.
"மனுதாரர் பட் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 1997-ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், அவர்களது விசா காலாவதியான அடிப்படையில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆதாரமற்ற நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"என்னுடைய தாய், சகோதரி மற்றும் ஒரு தம்பியை ஏப்ரல் 29 அன்று இரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்தனர். ஏப்ரல் 30 அன்று மதியம் 12:20 மணியளவில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது எல்லையிலிருந்து இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். இந்தியர்களாக இருக்கும்பட்சத்திலும் அவர்களை நாடு கடத்த முயல்கின்றனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்" என்று பட் கூறினார்.