"முஸ்லிம்களையும் காஷ்மீரியர்களையும் குறிவைக்க வேண்டாம்" என்று கேட்டுக்கொண்ட ஹிமான்ஷி நர்வால், "நாட்டில் அமைதி நிலவ வேண்டும்" என்றும், தனது கணவருக்கான "நியாயம் தேவை" என்றும் கண்ணீர்மல்க வலியுறுத்தினார். காஷ்மீரின் பஹல்காமில் 10 நாட்களுக்கு முன்பு, தனது பிறந்த நாளன்று, கடற்படையில் லெப்டினன்டாக பணியாற்றிய வினய் நர்வால் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். கடந்த வியாழக்கிழமை அவர், 27-வது பிறந்த நாளை கொண்டாடியிருக்க வேண்டிய நாள்" என்று அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் கூறினார்.
"நாங்கள் முஸ்லிம்களையும் காஷ்மீரிகளையும் திட்டுவதை விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும். கணவருக்கு அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்," என்று ஹரியானாவின் கர்னாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான முகாமுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஹிமான்ஷி கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Pahalgam terror victim Vinay Narwal’s wife appeals for communal harmony
ஏப்ரல் 22 பயங்கரவாதத் தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் வினய் நர்வாலை ஹிமான்ஷி மணந்தார். ஹிமான்ஷி மற்றும் நர்வால் பஹல்காமில் தேனிலவுக்காக இருந்தபோது, பயங்கரவாதிகள் கடற்படை அதிகாரியை நேருக்குநேர் சுட்டுக் கொன்றனர். இரத்த தான முகாமில் பங்கேற்ற மக்களுக்கு நர்வாலின் சகோதரி சிருஷ்டி தனது நன்றியைத் தெரிவித்தார்.
"தூரத்திலிருந்து வந்து இரத்தம் தானம் செய்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நிறைய செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. இரத்ததான முகாமுக்கான மக்கள் சேவையில் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. அரசு தரப்பிலும் நிறைய உதவிகள் செய்யப்பட்டுள்ளன," என்று சிருஷ்டி கூறினார். முகாமில் இரத்த தானம் செய்ய பெங்களூருவிலிருந்து தம்பதியினர் விமானத்தில் வந்ததாகவும், டெல்லியில் இருந்து பலர் வந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த முகாமை ஹரியானாவைத் தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான தேசிய ஒருங்கிணைந்த கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மன்றம் (NIFAA) ஏற்பாடு செய்தது. கூட்டத்தில் உரையாற்றிய பல்வேறு பேச்சாளர்கள், மறைந்த அதிகாரி சேவையில் இருந்தபோது அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தார் என்றும், அனைவரின் இதயங்களிலும் என்றென்றும் வாழ்வார் என்றும் கூறினர்.
“பல ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்ய வேண்டிய ஒரு இளைஞர் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் ஒரு வீரர் இரத்தம் சிந்துவதன் மூலம் மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறார். மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இன்று நாம் அவரது நினைவாக இரத்த தானம் செய்கிறோம்,” என்று NIFAA தலைவர் பிரித்பால் சிங் பன்னு கூறினார்.
முகாமில் இரத்த தானம் செய்தவர்களில் ஒருவர், “நார்வாலின் தியாகத்திற்கு தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும். நமது இரத்த தானம் செய்வதன் மூலம் மட்டுமே நமது அஞ்சலியைச் செலுத்த முடியும், ஆனால் அவரது மரணத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்றார்.
முன்னதாக, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, நர்வாலின் குடும்பத்தில் ஒருவருக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.