பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (மே 09) ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
பல்வேறு பொது மற்றும் தனியார் வங்கிகள், ரிசர்வ் வங்கி (RBI), தேசிய பண பரிவர்த்தனை கழகம் (NPCI), என்.எஸ்.இ, பி.எஸ்.இ மற்றும் இந்திய கணினி அவசர கால நடவடிக்கை குழு (Cert-In) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பை பாதுகாக்க Cert-In பல்வேறு முக்கிய துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
நேற்று (மே 8) இரவு, பாகிஸ்தான் ஆயுதப் படைகள் இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) பகுதியில் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது இலக்குகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மின் அமைச்சகம், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் போன்ற இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பைக் கையாளும் நிறுவனங்கள் "உயர் எச்சரிக்கை" நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக மே 7 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.
"சில உள்கட்டமைப்புகளில் டி.டி.ஓ.எஸ் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், நாங்கள் அவற்றை கட்டுப்படுத்தியுள்ளோம். இப்போது இதுபோன்ற முயற்சிகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என்பதால் நாங்கள் உயர் எச்சரிக்கையில் இருக்கிறோம்" என்று ஒரு மூத்த அரசு அதிகாரி முன்னதாக தெரிவித்திருந்தார். டி.டி.ஓ.எஸ் (Distributed Denial of Service) தாக்குதல் என்பது ஒரு இணைய தாக்குதலாகும்.
"ஆபரேஷன் சிந்துர்" பற்றிய செய்தி வெளியான உடனேயே, எக்ஸ் (X) போன்ற சமூக ஊடக தளங்கள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது இலக்குகளில் இந்தியா நடத்திய தாக்குதல்கள் தொடர்பான தவறான தகவல்களால் நிரம்பி வழிந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்கள் உடனடியாக செயல்பட்டு, தாக்குதல்கள் தொடர்பான தவறான தகவல்களை பரப்பும் எந்த உள்ளடக்கத்தையும் அல்லது கணக்கையும் தடுக்கும் சட்ட அதிகாரங்களை பயன்படுத்த முடிவு செய்தன.
நேற்று, "சர்வதேச செய்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய எக்ஸ் பயனர்கள்" உட்பட இந்தியாவில் 8,000 க்கும் மேற்பட்ட கணக்குகளைத் தடுக்க இந்திய அரசாங்கத்திடமிருந்து நிர்வாக உத்தரவுகளைப் பெற்றதாகக் எக்ஸ் (X) சமூக ஊடக தளம் கூறியது. நிர்வாக உத்தரவுகளை மீறினால், நிறுவனம் கணிசமான அபராதம் மற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை உட்பட சாத்தியமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று கூறியது.