சிந்து நதி நீர் ஒப்பந்தம்: மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பாக்., அழைப்பு; இந்தியா ஏற்க மறுப்பு

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்தியா அதன் முடிவில் உறுதியாக உள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்தியா அதன் முடிவில் உறுதியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chenab river

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பாக்., அழைப்பு; இந்தியா ஏற்க மறுப்பு

ஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) தொடர்பாக மீண்டும் இந்தியாவிடம் பேச பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

மே 15-ம் தேதி வெளியிட்ட செய்தியின்படி, ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதற்கான இந்திய மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான தகவலுக்கு பாகிஸ்தானின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசா முன்னரே பதிலளித்திருந்தார். தனது கடிதத்தில், இந்தியா எதிர்க்கும் ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விதிகள் குறித்து விவாதிக்க அவர் முன்வந்தார். இதன்மூலம், ஒப்பந்தத்தின் விதிமுறை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் முறையாக தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும். இந்தத் தொடர்பு 'ஆபரேஷன் சிந்தூர்' நடைபெறுவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மே மாதத்தில் சில தேதிகளையும் உள்ளடக்கியிருந்தது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அதன் பின்னர், பாகிஸ்தான் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு மீண்டும் கடிதம் எழுதி, பேச்சுவார்த்தைக்கான தனது கோரிக்கையை புதுப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானிடமிருந்து 2 கூடுதல் கடிதங்கள் வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களின்படி, இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு தற்போது ஆர்வம் இல்லை என்றும், இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கடிதங்கள், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் ஆட்சேபனைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பலமுறை முன்வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஏனெனில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் (IWT) "மறுஆய்வு மற்றும் திருத்தம்" கோரி, இந்தியா ஜனவரி 2023 மற்றும் மீண்டும் செப்டம்பர் 2024-ல் என 2 முறை முன் அறிவிப்புகள் அனுப்பிய போதிலும், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான எந்த விருப்பத்தையும் வெளிப்படையாகக் காட்டவில்லை. ஏப்.22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா உடனடியாக ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்த பிறகுதான் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, சிந்து நதி அமைப்பிலிருந்து இந்திய மாநிலங்களுக்கு நீரைத் திசை திருப்புவதற்காகக் கால்வாய் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. முதற்கட்டமாக, பியாஸ் நதியிலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகருக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல, 130 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-ம் கட்டமாக, 70 கி.மீ. தொலைவிற்கு இந்தக் கால்வாய் யமுனை நதி வரை நீட்டிக்கப்படும். இதன் மூலம் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லிக்குத் தண்ணீர் கிடைக்கும். முதற்கட்டத்திற்கான திட்டமிடப்பட்ட காலக்கெடு 3 ஆண்டுகள் என்றாலும், 2 ஆண்டுகளில் அதை முடிக்க முடியும் என்றும் 2.5 ஆண்டுகளுக்குள் நீர் திசைதிருப்பல் தொடங்கும் என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தப்படுவதால், ரபி பயிர் பருவத்தில் சவால்கள் ஏற்படக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. "ரபி பருவத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக நீர் கிடைக்காமல் போனால், பயிர்சேதத்திற்கு வழிவகுக்கும். குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படலாம். இருப்பினும், பாகிஸ்தானின் காரிஃப் பயிர்கள் பருவமழைக் காலத்துடன் ஒத்துப்போவதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை" என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார்.

பருவமழை ஓய்ந்தவுடன், செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதிகளில் உள்ள தனது நீர்மின் நிலைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிக்க, நீரை வேகமாக வெளியேற்றி தூர்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. "இந்த நீர்த்தேக்கங்களை முழுமையாகத் தூர்வார வேண்டும். சிலவற்றில், வண்டல் மண்ணும் படிவுகளும் பாறைகளாக கடினமாகிவிட்டன. நீர்த்தேக்கங்களின் படுகைகளில் 5% பாறைகளாக மாறியுள்ளன" என்று ஒரு அதிகாரி கூறினார்.

கடந்த மாதம் வெளியிட்ட செய்தியின்படி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரில் செனாப் ஆற்றின் மீது அமைந்துள்ள, இந்தியாவின் நதிநீரோட்ட நீர்மின் திட்டங்களான பக்லிஹார் மற்றும் சலால் ஆகியவற்றில் முதல் முறையாக நீரை வேகமாக வெளியேற்றி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மின் உற்பத்திக்குத் தடையாக இருந்த வண்டல் படிவுகளை அகற்றுவதே இந்தப் பணியின் நோக்கமாக இருந்தது. 1987-ல் சலால் திட்டமும், 2008-09-ல் பக்லிஹார் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து இத்தகையப் பணி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் தெரிவித்த தொடர் ஆட்சேபனைகளால், இந்தியாவால் இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

மே மாத தொடக்கத்தில் தொடங்கிய இந்தத் தூய்மைப்படுத்தும் பணியின் மூலம், 690 மெகாவாட் திறன் கொண்ட சலால் மற்றும் 900 மெகாவாட் திறன் கொண்ட பக்லிஹார் திட்டங்களின் நீர்த்தேக்கங்களிலிருந்து சுமார் 7.5 மில்லியன் கன மீட்டர் (MCM) வண்டல் படிவுகள் அகற்றப்பட்டன.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: