பருவமழை ஓய்ந்தவுடன், செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதிகளில் உள்ள தனது நீர்மின் நிலைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிக்க, நீரை வேகமாக வெளியேற்றி தூர்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. "இந்த நீர்த்தேக்கங்களை முழுமையாகத் தூர்வார வேண்டும். சிலவற்றில், வண்டல் மண்ணும் படிவுகளும் பாறைகளாக கடினமாகிவிட்டன. நீர்த்தேக்கங்களின் படுகைகளில் 5% பாறைகளாக மாறியுள்ளன" என்று ஒரு அதிகாரி கூறினார்.
கடந்த மாதம் வெளியிட்ட செய்தியின்படி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரில் செனாப் ஆற்றின் மீது அமைந்துள்ள, இந்தியாவின் நதிநீரோட்ட நீர்மின் திட்டங்களான பக்லிஹார் மற்றும் சலால் ஆகியவற்றில் முதல் முறையாக நீரை வேகமாக வெளியேற்றி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மின் உற்பத்திக்குத் தடையாக இருந்த வண்டல் படிவுகளை அகற்றுவதே இந்தப் பணியின் நோக்கமாக இருந்தது. 1987-ல் சலால் திட்டமும், 2008-09-ல் பக்லிஹார் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து இத்தகையப் பணி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் தெரிவித்த தொடர் ஆட்சேபனைகளால், இந்தியாவால் இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
மே மாத தொடக்கத்தில் தொடங்கிய இந்தத் தூய்மைப்படுத்தும் பணியின் மூலம், 690 மெகாவாட் திறன் கொண்ட சலால் மற்றும் 900 மெகாவாட் திறன் கொண்ட பக்லிஹார் திட்டங்களின் நீர்த்தேக்கங்களிலிருந்து சுமார் 7.5 மில்லியன் கன மீட்டர் (MCM) வண்டல் படிவுகள் அகற்றப்பட்டன.