பாஸ்போர்ட் சட்டத் திருத்தம் புதிய மாற்றங்கள் வர உள்ளது. இந்தியாவில் குற்றங்கள் புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று மறைந்துவிடும் பணக்காரர்களுக்காக இம்மாற்றம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்துறை நிர்வாகம் மிக விரைவில் பாஸ்போர்ட் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இது தொடர்பாக ஒரு குழுவினை அமைத்தது மத்திய உள்துறை அமைச்சகம். அதில் நிதி சேவைகளின் செக்கரட்டரியாக செயல்பட்டு வரும் ராஜிவ் குமார் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
இவ்விசாரணைக் குழு இரட்டை குடியுரிமை மற்றும் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டுகளை தவறாக உபயோகிப்பவர்கள் யார் யார் என்பதை கண்காணித்து கூறும்.
இதனை விசாரித்த குழு மத்திய அமைச்சகத்திடம், பாஸ்போர்ட் சட்டத் திருத்தம் மூலம் மட்டுமே இது போன்று நாட்டை விட்டு தப்பி ஓடும் குற்றவாளிகளை தடுக்க இயலும் என்று கூறியுள்ளது.
வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மெகுல் சோக்சி இரட்டை குடியுரிமையை பயன்படுத்தி கரீபிய தீவுகளில் இருக்கும் ஆண்ட்டிகுவா நாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.
பஞ்சாப் தேசிய வங்கியில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் போலி பத்திரங்கள் மூலம் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார் மெகுல் சோக்சி.
இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் கையில் இரண்டு நாட்டின் பாஸ்போர்ட்டும் இருக்கும் என்பதால் அவர்கள் எங்கே இருக்கின்றார்கள், எப்படி கைது செய்வது போன்றவைகள் புலனாய்வுத் துறைக்கு தலைவலியாக முடிந்துவிடுகிறது.
To read this article in English
மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பியோடிய சில நாட்களிலேயே, 50 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களின் பாஸ்போர்ட் எண்ணினை வாங்கிக் கொள்ளும்படி வங்கிகள் அனைத்திற்கும் உத்தரவிட்டது மத்திய அரசு.
ஏற்கனவே கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாளி விஜய் மல்லைய்யா வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு 2016ம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடினார். தற்போது அதே வரிசையில் நீரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்தினரும் தப்பி ஓடிவிட்டனர்.
2018-19ற்கான பட்ஜெட்டில் பாஸ்போர்ட் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே அருண் ஜெட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.