இந்தியாவில் சாலை விபத்துகள் தினந்தோறும் பெருமளவில் நடைபெறுகின்றன. வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல் உள்ளிட்டவற்றால் சாலை விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெருகிவரும் சாலை விபத்துகளை தவிர்க்க, 18 வயதுக்குட்பட்டோர் கார் ஓட்டினால், அவர்களது பெற்றோரை ஒருநாள் மட்டும் சிறையில் அடைக்க காவல் துறை புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது.
அவ்வாறு கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 45 பேரின் பெற்றோர் ஒருநாள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய தண்டனையால், இளம்வயதினரால் சாலையில் நிகழும் விபத்துகள் பெருமளவில் குறையும் என காவல் துறையினர் கருதுகின்றனர். இதனை, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும், இளம் வயதினரால் வாகன விபத்துகள் நடைபெறுவதற்கு, அவர்களுடைய பெற்றோர் என்ன தவறு செய்தனர் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.