பாஸ்போர்ட் என்பது இன்று மனிதனின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. கல்வி, தொழிற்பயிற்சி, வியாபாரம், நண்பர்கள், சுற்றுலா, மருத்துவம், உறவினர்கள் என வெளிநாடுகளுக்கு பறப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாஸ்போர்ட் எடுப்பவர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக அதிகரித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் இல்லாதவர்கள், பாஸ்போர்ட் பெற அதிக முனைப்பு காட்டிவருகின்றனர். பாஸ்போர்ட் வாங்க ஆன்லைன் முறையிலோ அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திரா மூலம் தொடர்பு கொண்டு நாம் பாஸ்போர்ட் பெறலாம். பாஸ்போர்ட் வாங்க நாம் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவைகளாவன, வயது சான்றிதழ், முகவரி சான்று, பெயர் சான்று உள்ளிட்டவைகள் இணைக்கப்பட வேண்டும்.
முகவரி சான்றுக்கு, ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிலருக்கு, ஆதார் கார்டில், தவறான முகவரி இருக்கும், இல்லையெனில், பெயர், வயது, பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களில் ஏதாவதொரு பிழை இருக்கும். இவ்வாறிருக்கும்பட்சதத்தில், பாஸ்போர்ட் பெற இயலாத சூழ்நிலை ஏற்படும். இப்படி நிறைய பேருக்கு ஆதார் கார்டில் பிரச்னைகள் இருப்பதால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டிலான பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களுக்கு முகவரி சான்றுக்கு ஆதார் கார்டு தவிர்த்து, இந்த ஆவணங்களை முகவரி சான்று ஆக எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
முகவரி சான்றுக்கான ஆவணமாக குடிநீர் ரசீது, லேண்ட்லைன் அல்லது போஸ்ட்பெய்ட் மொபைல் பில், மின்கட்டண ரசீது, வருமானவரி கட்டியதற்கான பதிவேடு, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, சமையல் கேஸ் சிலிண்டர் ரசீது, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் லெட்டர்பேடில், அந்த நிறுவன ஊழியருக்கான சான்று, வாடகை ரசீது, போட்டோவுடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம் உள்ளிட்டவைகளை, ஆதார் கார்டிற்கு பதிலாக முகவரிக்கான சான்று ஆக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.