மனைவியை கை விட்ட, 45 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலர், இந்தியாவில் திருமணம் செய்து மனைவியை பிரிந்து விடுகின்றனர். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, “வெளிநாடுவாழ் இந்தியர் திருமணங்களில் தலை மறைவான கணவர்கள் தொடர்பான புகார்களை ஆராய ஒருங்கிணைந்த பல்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தலைமறைவானவர்களை கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பும்.
அப்படி கண்டறியப்பட்ட 45 பேரின் பாஸ்போர்ட்டுகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. என்.ஆர்.ஐ-க்களால் கை விடப்படும் பெண்களுக்கு நீதி வழங்கும் விதமாக மாநிலங்களவையில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் அந்த மசோதா அப்படியே முடங்கிவிட்டது வருத்தமளிக்கிறது” என்றார்.