பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்போனை ஒட்டுக்கேட்க, பெகாசஸ் ஸ்பைவேரைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் உலகளாவிய சர்ச்சையின் மையத்தில் உள்ள என்எஸ்ஓ குழுமத்தை, அமெரிக்கா தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் விஷம்பர் பிரசாத் நிஷாத் மற்றும் சவுத்ரி சுக்ராம் சிங் யாதவ் ஆகியோரின் கேள்விக்கு பதிலளித்த தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், NSO குழுமத்தை இந்தியாவில் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
“பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேரை வழங்கியதற்காக, NSO குழுமம் மற்றும் Candiru ஐ அமெரிக்கா தடுப்புப்பட்டியலில் சேர்த்திருக்கிறதா; (b) அப்படியானால், அதன் விவரங்கள்; (c) இந்தியாவில் NSO குழுமத்தை அமைச்சகம் தடைசெய்துள்ளதா; (d) அப்படியானால், அதன் விவரங்கள்; மற்றும் (e) இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” என்று எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
NSO குழுமம் மற்றும் இணைய-கண்காணிப்பு சந்தையில் அதன் போட்டியாளராகக் கருதப்படும் அதிகம் அறியப்படாத Candiru ஆகிய இரண்டும், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உளவு பார்க்க அரசாங்கங்களுக்கு ஸ்பைவேர் மென்பொருளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
கேள்விகளுக்குப் பதிலளித்த சந்திரசேகர், “இந்த அமைச்சகத்திடம் அத்தகைய தகவல்கள் எதுவும் இல்லை. என்எஸ்ஓ குழுமம் என்ற பெயரில் எந்தக் குழுவையும் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
நவம்பரில், அமெரிக்க வர்த்தகத் துறை இரண்டு இஸ்ரேலிய ஸ்பைவேர் நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்தது, தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியலில் அவற்றைச் சேர்த்தது.
இந்த ஆண்டு ஆகஸ்டில், இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதா என்பது குறித்த விவரங்களைக் கோரிய ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், “பெகாசஸ் நிலுவையில் உள்ள பிரச்சினை” எனவே இது சப்ஜூடிஸ் என்று மத்திய அரசு கூறியது.
சிபிஐ எம்பி பினோய் விஸ்வம் கேட்ட கேள்வி, கேள்விகளை ஏற்கும் தன்மையைக் கையாளும் மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் 47 (xix) விதியை அரசாங்கம் மேற்கோள் காட்டியதால் நிராகரிக்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil