புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையும் என்று பீட்டர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், சிங்காரவேலர் சிலை அருகே நேற்று (மே 3) இரவு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு கட்சி தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தமிழக சிறுபான்மையினர் பிரிவு தலைவரான பீட்டர் அல்ஃபோன்ஸ் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, "காங்கிரசுக்கு சில நேரங்களில் தோல்வி தேவைப்படுகிறது. தோல்வி நேரத்தில் நம்முடன் இருப்பவர்களே உண்மையான தொண்டர்கள்.
அப்போது தான் நமது தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள எம்.பி.க்கள் மத்திய மந்திரி சபையில் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், இப்போது முதலமைச்சர் ரங்கசாமியால் பிரதமருக்கு எதிராக அமர்ந்து பேச முடியுமா? தற்போது நடைபெறும் கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது.
அந்த வகையில், புதுச்சேரியில் மீண்டும் சிறப்பான ஆட்சி அமைய வேண்டும். அதற்காக, வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். இதனிடையே, காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்காக சாலையின் நடுவே மேடை அமைக்கப்பட்டிருந்தால், போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.