மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை.5) தாக்கல் செய்தார். இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், பெரும்பாலான பிரிவுகளில் குறிப்பிடத்தகுந்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. குறிப்பாக, ரயில்வே பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்த எந்த அறிவிப்பு இடம் பெறவில்லை. தண்டவாளங்கள் அமைத்தல், சர்வதேச அளவில் ரயில் நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகளில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு செயல்படப் போவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததே குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மற்றும் தங்கம் இறக்குமதி வரியும் அதிகரிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதாவது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான கலால் வரி ரூ.1 அதிகரிக்கப்படுவதாக கூறியுள்ளார். சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவே, பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை தலா 1 ரூபாய் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். அதேபோல், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10%ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராம் கூறியுள்ளார்.
இந்த விலை உயர்வுக்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசின் எரிபொருள் மீதான வரி உயர்வு அறிவிப்பால் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் கண்டாலும் பெருமளவு விலை உயர்ந்துவிடுகிறது. தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். தவிர, அண்மை காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 90 ரூபாய் வரை நெருங்கிய அவலமும் அரங்கேறியது. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியில் 1 ரூபாய் அதிகரிப்பதாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருப்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கப் போகிறது என்பதில் மாற்றமில்லை.
அதேபோல், தங்கத்தின் இறக்குமதி வரியும் 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது. 2.5 சதவிகிதம் வரி அதிகரிப்பால், தங்கத்தின் விலையும் உயருகிறது. ஏழை மக்கள் அதிகளவு தங்கம் வாங்கப் போவதும் இல்லை, பணக்காரர்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தினாலும் கவலை இல்லை. வழக்கம் போல், இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல், மீசைக்கும் ஆசைப்படும், கூழுக்கும் ஆசைப்படும் மிடில் கிளாஸ் மக்களையே இந்த விலை உயர்வுகள் பாதிப்படைய வைக்கப் போகிறது!.