scorecardresearch

PM CARES Fund: 3 ஆண்டுகளில் ரூ. 535 கோடி வெளிநாட்டு நிதி வரவு

PM CARES பிரதம மந்திரியின் அவசரகால நிவாரண நிதி திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு நன்கொடையாக ரூ.535.44 கோடி பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.

PM CARES
PM CARES

பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிலைகளுக்கான நிவாரண நிதி (PM CARES Fund) திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.535.44 கோடி வெளிநாட்டு நிதி பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து 2020-ல் அமைக்கப்பட்ட PM CARES நிதியின் ரசீது மற்றும் பணம் செலுத்தும் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. 2019-20 நிதியாண்டில் இந்த திட்டத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு பங்களிப்புகளின் மதிப்பு ரூ.0.40 கோடியாக இருந்தது. 2020-21-ல் ரூ.494.92 கோடியும், 2021-22-ல் ரூ.40.12 கோடியும் நிதியாக பெறப்பட்டுள்ளது.

PM CARE ஃபண்ட் 2019-20 முதல் 2021-22 வரையிலான மூன்று நிதியாண்டுகளில் அதன் வெளிநாட்டு பங்களிப்புக் கணக்கிலிருந்து வட்டி வருமானமாக ரூ.24.85 கோடியைப் பெற்றதாக பதிவுகள் காட்டுகின்றன.

தொற்றுநோய் பரவிய காலமான 2020-21-ல் PM CARES நிதிக்கான வெளிநாட்டு பங்களிப்புகள் உச்சத்தை எட்டியதாக புள்ளி விவரங்கள் காட்டுகிறது. இதையடுத்து அடுத்த நிதியாண்டில் இந்த நிதி சரிந்தது. வெளிநாட்டு பங்களிப்பு வீழ்ச்சியைப் போலவே, தன்னார்வ பங்களிப்புகளும் 2020-21ல் ரூ.7,183.77 கோடியிலிருந்து 2021-22ல் ரூ.1,896.76 கோடியாக குறைந்துள்ளது. 2019-20ல் தன்னார்வ பங்களிப்பு ரூ.3,075.85 கோடியாக இருந்தது.

2019-22 முதல் மூன்று ஆண்டுகளில், PM CARES நிதியானது தன்னார்வ பங்களிப்புகளாக (ரூ. 12,156.39 கோடி) மற்றும் வெளிநாட்டு பங்களிப்புகளாக (ரூ. 535.43 கோடி) என மொத்தம் ரூ.12,691.82 கோடியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பிட்ட 3 நாட்களில் மார்ச் 27, 2020 அன்று PM CARES நிதியானது டெல்லி பதிவுச் சட்டம், 1908 இன் கீழ் ஒரு பொது தொண்டு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது.

பிரதமர் பி.எம் கேர்ஸ் நிதியத்தின் அதிகாரபூர்வ தலைவராகவும், பாதுகாப்பு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் நிதியத்தின் பொறுப்பாளர்களாகவும் உள்ளனர். இதில் 3 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி கே.டி தாமஸ் (ஓய்வு), கரியா முண்டா மற்றும் ரத்தன் என்.டாடா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, “PM CARES நிதிக்கான நன்கொடைகள் வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் 100% வரி விலக்கிற்கு பொருந்தும். 80G நன்மைகளுக்குத் தகுதிபெறும். PM CARES நிதிக்கான நன்கொடைகளும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பாக (CSR) கணக்கிடப்படும்.

பி.எம் கேர்ஸ் நிதியின் செலவின விவரங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர்கள், புலம்பெயர்ந்தோர் நலன், இரண்டு 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட் மருத்துவமனைகளை நிறுவுதல், 162 பிரஷர் ஸ்விங் அப்சார்ப்ஷன் (PSA), மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தொகை செலவிடப்பட்டுள்ளது.

மார்ச் 31, 2022 நிலவரப்படி, ரூ. 5,4156.65 கோடி நிதி இருப்பு உள்ளது எனப் பதிவுகள் காட்டுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pm cares fund receives rs 535 crore as foreign donations in three years