பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாகச் செப்டம்பர் 22 ஆம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு குவாட் மாநாட்டில் கலந்துகொண்டதையடுத்து, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் 76 வது அமர்வில் உரையாற்றினார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோரை சந்தித்தும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மோடிக்கு, டெல்லி பாலம் விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்கா ஒப்படைத்த 157 கலைப்பொருட்களைப் பிரதமர் மோடி இந்தியாவிற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் செலவிட்ட 65 மணி நேரத்தில், மொத்தமாக 20 மீட்டிங்கில் மோடி பங்கேற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, அமெரிக்காவுக்கு விமானத்தில் செல்லும் போதும், மீண்டும் இந்தியா வரும் போதும் அதிகாரிகளுடன் நான்கு சந்திப்பை நடத்தியுள்ளார்.
செப் 22 ஆம் தேதி அமெரிக்கா செல்கையில் விமானத்திலே அதிகாரிகளுடன் இரண்டு மீட்டிங் நடத்தியுள்ளார். பின்னர், தங்கும் விடுதியில் மூன்று மீட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.
தொடர்ந்து, செப் 23 ஆம் தேதி, குளோபல் சி.இ.ஓ.க்களுடன் 5 மீட்டிங் நடத்தியுள்ளார். அதனையடுத்து, துணை அதிபர் கமலா ஹாரிஸை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஆஸ்திரேலிய ஸ்காட் மோரிசன் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்து இருநாட்டு உறவு வலுப்படுத்துதல் குறித்து விவாதித்தார். இதற்கிடையே, மூன்று கூட்டங்களுக்கும் தலைமை தாங்கினார்.
மறுநாள், செப் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். இதையடுத்து, பல நாட்டு தலைவர்கள் பங்கேற்ற குவாட் உச்ச மாநாட்டில் கலந்துகொண்டார். அன்றைய தினமே, நான்கு கூட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
மறுநாள், செப்டம்பர் 25 ஆம் தேதி, இந்தியா வருகையில் விமானத்திலே அதிகாரிகளுடன் இரண்டு மீட்டிங்கில் பங்கேற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பெரும்பாலும் தனது வெளிநாட்டுப் பயணங்களில் ஒரு பிஸியான அட்டவணையை வைத்திருப்பார் என கூறப்படுகிறது. முக்கிய ஆவணங்களை ஆராய்வதும், முக்கியமான சந்திப்புகள் போன்றவை நடத்துவது ஆகும்.
உதாரணத்திற்கு, இம்முறை அமெரிக்கா சென்ற போது, விமானத்தில் முக்கிய கோப்புகளை பார்க்கும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil