தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி மான் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று (பிப்.28) 74வது முறையாக மான் கி பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தற்சார்பு இந்தியா கொள்கையை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தார். “உள்நாட்டு தயாரிப்புகளைப் பற்றி மக்கள் பெருமிதம் கொள்ளும்போது, ஆத்மநிர்பார் பாரத் பொருளாதார வேலைத்திட்டமாக மட்டுமல்லாமல் தேசிய உணர்வாகவும் மாறும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தண்ணீர் பாதுகாப்பு, கொரோனா வைரஸுக்கு எதிரான நாட்டின் போர், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வரவிருக்கும் தேர்வுகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் தொட்டுப் பேசினார்.
இந்தியாவில் கோடை காலம் விரைவாக நெருங்கி வருவதால், அனைத்து இந்தியர்களும் தண்ணீர் பாதுகாப்பு குறித்த தங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வது அவசியம் என்று பிரதமர் மோடி கூறினார். மழை நீர் சேகரிப்பை நோக்கமாகக் கொண்ட ஜல் சக்தி அமைச்சகத்தின் வரவிருக்கும் ‘மழை நீரை சேமிப்பு’ பிரச்சாரத்தையும் அவர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழின் இலக்கியத்தரம் குறித்து ஏராளமானோர் தம்மிடம் புகழ்ந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், இயற்கையை பாதுகாப்பதில் அசாம் மக்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அசாம் மாநிலத்திலுள்ள காஸிரங்கா பூங்காவில் 112 பறவையினங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் 58 பறவையினங்கள் கோடை காலத்தில் வெவ்வேறு நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன. அசாம் மாநிலத்தில் இயற்கையை காப்பதில் கோயில்களுக்கும் முக்கியப் பங்குள்ளது.
பருவமழைக்கு முன்பாக நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 100 நாட்கள் நாம் அனைவரும் தண்ணீரை சேமிப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டும்.” என்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்பட்ட கிணறுகளை புதுப்பிக்கும் பணிகளில் அம்மாவட்ட மக்கள் ஈடுபட்டிருக்கின்றனர்; மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வாழை நாரில் இருந்து பல பொருட்களை உருவாக்கி வருகிறார் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"