/tamil-ie/media/media_files/uploads/2019/02/modi-salman.jpg)
நேற்றிரவு புது டெல்லி வந்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் மோடி நேரில் விமான நிலையம் சென்று வரவேற்றார்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விமானத்தை விட்டு இறங்கியதும், அவரை கட்டித் தழுவி மோடி வரவேற்றார். அதோடு ”சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என ட்வீட்டும் செய்திருந்தார்.
இந்தியாவுக்கு வருகை புரிவதற்கு முன்னர், பாகிஸ்தான் சென்று திரும்பிய அவர், “பேச்சு வார்த்தை ஒன்று மட்டுமே இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உள்ள பிரச்னையை தீர்க்கும்” என்றார்.
இன்று பிரதமர் மோடியும் சவுதி இளவரசர் சல்மானும் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அப்போது பயங்கரவாதம் பற்றிப் பேச அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக புல்வாமா தாக்குதலின் பின்னணி குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தவிர, பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் உதவி வருவது குறித்து, இந்தியாவின் அதிருப்தியையும் மோடி, சல்மானிடம் தெரிவிக்க இருக்கிறார். அதோடு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவ பயிற்சி பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.
அதன் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிகிறது. அதில் பயங்கரவாத ஒழிப்பு குறித்த முக்கிய 5 விஷயங்கள் இடம் பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 11.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படுகிறார் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.