ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) துபாயில் இன்று (பிப்.14) புதன்கிழமை நடைபெறவுள்ள உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். முன்னதாக அவரை வரவேற்கும் விதமாக உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா இந்தியாவின் மூவர்ணக் கொடி வண்ணத்தில் மிளிர்ந்தது. அதில், "கௌரவ விருந்தினர் - இந்திய குடியரசு" என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.
அரபு நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று (செவ்வாய்க் கிழமை) சென்றார். அபுதாபி வந்தடைந்த பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கட்டியணைத்து வரவேற்றார்.
மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பும் வியூக மதிப்பாய்வு செய்தனர், புதிய ஒத்துழைப்பு பகுதிகள் குறித்து விவாதித்தனர் மற்றும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
கடந்த 7 மாதங்களில் இரு தலைவர்களும் 5 முறை சந்தித்துள்ளனர். மேலும் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு 7-வது முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார்.
இரு நாடுகளும் தங்களது டிஜிட்டல் பேமெண்ட் தளங்களை - யு.பி.ஐ (இந்தியா) மற்றும் ஏ.ஏ.என்.ஐ (யுஏஇ) இணைக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “இந்த திட்டம் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை எளிதாக்கும். இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமரின் அபுதாபி பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பணம் மற்றும் செய்தியிடல் முறைகளை இணைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பின்பற்றுகிறது” என்று கூறியுள்ளது.
அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 'அஹ்லான் மோடி' (Hello Modi in Arabic) நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியாவையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் பார்ட்னர்ஸ் என்று பாராட்டினார். உலகிற்கு ஒரு முன்மாதிரியாக அவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் ஒரு புதிய வரலாற்றை எழுதுகிறார்கள் என்றார்.
"சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், பாரதம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சாதனைகள் உலகிற்கு முன்மாதிரியாக செயல்படுகின்றன," என்று மோடி கூறினார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார். போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) மந்திர், அபுதாபியின் முதல் இந்து கோவில் ஆகும். துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/pm-modi-uae-visit-burj-khalifa-lights-up-guest-of-honor-9160327/?tbref=hp
அபுதாபியில் சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கட்டும் பணிகள் 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கோவில் கட்டுவதற்கான நிலத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நன்கொடையாக வழங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“