/tamil-ie/media/media_files/uploads/2022/04/biden-modi.jpg)
Let’s talk how to manage destabilising effects of Russia’s war: Biden to Modi: உக்ரைன் மக்களுக்கு இந்தியாவின் மனிதாபிமான உதவிகளை வரவேற்று, ரஷ்ய படையெடுப்பை "பயங்கரமான தாக்குதல்" என்று அழைத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் திங்களன்று, "இந்த ரஷ்யப் போரின் சீர்குலைவால் ஏற்பட்ட விளைவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான ஆலோசனையைத் தொடரப் போகிறது" என்றார்.
இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பிடனுடனான தனது காணொலி வாயிலான சந்திப்பில், ரஷ்யாவின் பெயரை குறிப்பிடாத பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனின் புச்சா நகரில் "அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது" "மிகவும் கவலைக்குரியது" என்று கூறினார். மேலும், இந்தியா உடனடியாக இந்தக் கொலைகளைக் கண்டித்ததுடன் சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்தது என்றும் பிரதமர் கூறினார்.
புச்சா கொலைகள் குறித்து பிரதமர் பேசுவது இதுவே முதல் முறை. வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் ஐ.நா.வில் உள்ள இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி ஆகியோர் சமீப நாட்களில் ஐயத்திற்கு இடமின்றி புச்சா கொலைகள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் உரையாடியதாகக் கூறிய மோடி, அவர்களுக்குள் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்த பரிந்துரைத்ததாகவும் கூறினார்.
அவர்களின் சந்திப்புக்குப் பிறகு, வெள்ளை மாளிகை, “இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில், தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அவர்கள் வலியுறுத்தினர். உலக உணவு விநியோகத்தில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரின் சீர்குலைக்கும் தாக்கங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர் என்று கூறியது.
Addressing the India-US virtual summit with @POTUS @JoeBiden. https://t.co/sgYlj2nqSG
— Narendra Modi (@narendramodi) April 11, 2022
வீடியோ மாநாட்டில் வெள்ளை மாளிகையில் பிடனுடன் நான்கு அமைச்சர்கள் பங்கேற்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் உடன் பங்கேற்றனர். மேலும் அறையில் அமெரிக்க என்எஸ்ஏ ஜேக் சல்லிவன் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோர் இருந்தனர்.
குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக மே 24 ஆம் தேதி ஜப்பானில் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிடன் கூறினார். நான்கு தலைவர்களும் கடந்த மார்ச் மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்தனர்.
திங்களன்று அமெரிக்க ஜனாதிபதியின் முன்முயற்சியின் பேரில் நடந்த சந்திப்பில் முதலில் பேசிய பிடன், "பகிரப்பட்ட மதிப்புகளை" சுட்டி காட்டினார்: "எங்கள் கூட்டாண்மையின் அடிப்படையானது, நமது மக்கள், குடும்ப உறவுகள், நட்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகள் ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான தொடர்பு ஆகும். குறிப்பாக, போர் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற டஜன் கணக்கான அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவமான, ரயில் நிலையத்தில் கடந்த வாரம் ஒரு சோகமான ஷெல் தாக்குதல் உட்பட கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் மக்களுக்கு இந்தியாவின் மனிதாபிமான ஆதரவை நான் வரவேற்க விரும்புகிறேன்.
"இந்த ரஷ்யப் போரின் சீர்குலைக்கும் விளைவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான ஆலோசனையைத் தொடரப் போகின்றன" என்று பிடன் மோடியிடம் கூறினார்.
உக்ரைன் நிலைமை குறித்து பிரதமரும் பேசினார். “உக்ரைனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நேரத்தில் எங்களது இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்தனர். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் இளம் மாணவர்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு மாணவர் உயிர் இழந்தாலும், நாங்கள் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினோம், ”என்று அவர் கூறினார்.
“இந்த பிரச்சனைகளின் போது, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் அதிபர்களுடன் நான் பலமுறை தொலைபேசியில் பேசினேன். நான் அமைதிக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி, உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதினுக்கு பரிந்துரைத்துள்ளேன்,'' என்றார்.
இந்தியா தனது நாடாளுமன்றத்திலும் உக்ரைன் குறித்து விரிவான விவாதங்களை நடத்தியதாக வலியுறுத்திய அவர், “சமீபத்தில் புச்சா நகரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. நாங்கள் உடனடியாக அதைக் கண்டித்தோம், சுதந்திரமான விசாரணையையும் கோரினோம். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழி வகுக்கும் என நம்புகிறோம்” என்றார்.
"உக்ரைனில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம், இதனை நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளோம். உக்ரைனின் கோரிக்கையின் பேரில், விரைவில் கூடுதல் மருந்துப் பொருட்களை அனுப்ப உள்ளோம்” என்று மோடி கூறினார்.
“இரண்டு துடிப்பான ஜனநாயக நாடுகளாக, கொரோனாவிலிருந்து நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள், உடல்நலம், பாதுகாப்பு மற்றும் காலநிலை நெருக்கடியைக் கண்காணிப்பது குறித்து எங்களுக்கு அதே கவலைகள் உள்ளன. மேலும் நாங்கள் வலுவான மற்றும் வளர்ந்து வரும் முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கிறோம்” என்று பிடென் கூறினார்.
"அமெரிக்க-இந்தியா உறவு தொடர்ந்து ஆழமாகவும் வலுவாகவும் வளர்வதை உறுதிசெய்வதற்கு எங்களின் தொடர்ச்சியான ஆலோசனை மற்றும் உரையாடல் முக்கியமானது, குறிப்பாக உலகின் உங்கள் பகுதி உட்பட, நமது மக்களுக்கும் நமது உலகளாவிய நன்மையை வழங்குவதற்கும் நாம் அனைவரும் நிர்வகிக்க விரும்புகிறோம்," என்று பிடென் கூறினார்.
2+2 சந்திப்புக்கு முன் அமெரிக்க அதிபரிடம் காணொலி சந்திப்பு குறித்த முன்முயற்சிக்கு நன்றி தெரிவித்த மோடி, “அதற்கு முந்தைய நம் சந்திப்பு (2+2 சந்திப்பு) மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது அவர்களின் விவாதங்களுக்கு வழிகாட்டும். கடந்த ஆண்டு செப்டம்பரில் நான் வாஷிங்டனில் இருந்தபோது, இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மை பல உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பங்களிக்கும் என்று அந்த நேரத்தில் நீங்கள் கூறியதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் முற்றாக உங்களுடன் உடன்படுகின்றேன். உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான இரண்டு ஜனநாயக நாடுகளாக, நாம் இயல்பான கூட்டணி நாடுகள். மேலும் கடந்த சில ஆண்டுகளில் நமது உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உருவாக்கப்பட்ட புதிய வேகம், சில தசாப்தங்களுக்கு முன்பு கற்பனை செய்வது கூட கடினமாக இருந்திருக்கும் என்றார்.
“உங்கள் பதவிக் காலத்தின் தொடக்கத்திலேயே மிக முக்கியமான முழக்கத்தை நீங்கள் கொடுத்தீர்கள் – ஜனநாயக நாடுகள் சிறப்பாக செயல்பட முடியும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மையின் வெற்றி இந்த முழக்கத்தை நனவாக்க சிறந்த வழியாகும் என்று மோடி பிடனிடம் கூறினார்.
இதையும் படியுங்கள்: காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்த பாக்., புதிய பிரதமர்!
“இந்த ஆண்டு, இந்தியா சுதந்திரமடைந்த 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மேலும் நமது இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அமெரிக்காவுடனான நட்புறவு இன்றியமையாத அங்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று மோடி கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், இரு தலைவர்களும் கொரோனா தொற்றுநோய், உலகளாவிய பொருளாதார மீட்பு, காலநிலை நடவடிக்கை, தெற்காசியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் உக்ரைனின் நிலைமை போன்ற பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
"சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய வியூக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்றும், உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
2+2 கூட்டங்களுக்குப் பிறகு, இருதரப்பும் கல்வி மற்றும் விண்வெளித் துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.
அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அமைச்சர் பிளிங்கனைச் சந்தித்தபோது, ராஜ்நாத் சிங் ஆஸ்டினை இருதரப்பு சந்திப்புகளில் தனித் தனியாகச் சந்தித்தார். “@SecBlinken உடனான காலை நேர சந்திப்புடன் நாள் தொடங்கியது. உலகளாவிய சூழ்நிலை, பிராந்திய ஹாட்ஸ்பாட்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றிய பரந்த அளவிலான கருத்துப் பரிமாற்றம். உண்மையான வியூக கூட்டணி நாடுகளின் ஆதரவு மற்றும் திறந்த மனப்பான்மையுடன் நடந்தது, ”என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
Began the day with a breakfast meeting with @SecBlinken.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 11, 2022
Wide ranging exchange of views on the global situation,regional hotspots and bilateral cooperation.
Took place with the comfort and openness of true strategic partners. pic.twitter.com/mOVJYSHMFT
ராஜ்நாத் சிங், ட்விட்டர் பதிவில், “அமெரிக்க @SecDef திரு லாயிட் ஆஸ்டினுடன் பென்டகனில் இன்று ஒரு அற்புதமான சந்திப்பு நடந்தது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முழு வரம்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைமையை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம்.
ஜெய்சங்கர், வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோ மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் டாய் ஆகியோரையும் சந்திப்பார், அதே நேரத்தில் ராஜ்நாத் சிங் வாஷிங்டன் டிசிக்கு பயணம் செய்த பிறகு, அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையின் தலைமையகமான ஹவாய்க்கு செல்வார்.
இந்த சந்திப்பு உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கு இந்தியாவாக கவனமாக வடிவமைக்கப்பட்ட இராஜதந்திர செய்திகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் இருந்து இந்தியா சமீபத்தில் ஒதுங்கியிருந்தது, ஆனால் அதே நேரத்தில் புச்சாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.