இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா 2022ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை இடையே சுமார் 4 பில்லியன் டாலர் விரைவான உதவியை வழங்கி இருந்தது.
Prime Minister Narendra | Sri Lankan President Ranil Wickremesinghe Tamil News: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்த அவரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் வரவேற்றார். இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்து விவாதித்தனர்.
Advertisment
இதன்பின்னர், இருநாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை, யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் கையெழுத்தாகியது.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், 'இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
Advertisment
Advertisements
கடல்வழி, விமானப் போக்குவரத்து, எரிசக்தி வர்த்தகம், சுற்றுலாத்துறை, திறன் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் 2 நாடுகளின் உறவு மிக முக்கியம். இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும்.
இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே, பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது' என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசுகையில், 'இந்தியாவின் தென் பகுதியில் இருந்து இலங்கைக்கு பல திட்ட பெட்ரோலியக் குழாய் அமைப்பது இலங்கைக்கு மலிவு மற்றும் நம்பகமான ஆற்றல் வளங்களை வழங்குவதை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடியும் நானும் நம்புகிறோம்.
கடந்த ஆண்டில் இலங்கை பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக சந்தித்த அசாதாரண சவால்களை பிரதமர் மோடியிடம் நான் விவாதித்தேன். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உறுதுணையாக இருந்த இந்தியாவுக்கு நன்றி.
இந்திய மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை உறுதி செய்வதில் பொருளாதார உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா 2022ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை இடையே சுமார் 4 பில்லியன் டாலர் விரைவான உதவியை வழங்கி இருந்தது நினைவுகூரத்தக்கது
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக்க முன்மொழிந்த தொழிலதிபர் கவுதம் அதானியையும் சந்தித்து பேசினார். அங்கு அவரது குழுமம் ஏற்கனவே கொள்கலன் முனையத்தையும் 500 மெகாவாட் காற்றாலை திட்டத்தையும் உருவாக்கி வருகிறது. ரணில் விக்கிரமசிங்கவை அதானி சந்தித்து, தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் புதிய முயற்சி குறித்து விவாதித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil