ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். பிரதமர் மோடி போப் பிரான்சிசை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். போப் ஆண்டவரைச் சந்திக்கும் ஐந்தாவது இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி, “போப் பிரான்சிஸூடன் மிகவும் அன்பான சந்திப்பை மேற்கொண்டேன். அவருடன் பலதரப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும், போப் பிரான்சிஸை இந்தியா வருமாறு அழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India. @Pontifex pic.twitter.com/QP0If1uJAC
— Narendra Modi (@narendramodi) October 30, 2021
இச்சந்திப்பானது, நாட்டின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ சமூகங்கள் மீதும், அதன் நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ள சமயத்தில் நடைபெற்றிருப்பதால் முக்கியத்தவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மூன்றாவது பெரிய மத சமூகம் கிறிஸ்தவர்கள் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிறிஸ்துவர்கள் மொத்த மக்கள் தொகையில் 2.3 சதவிகிதம் உள்ளனர். முதலிடத்தில் இந்து மத மக்கள் 79.8 விழுக்காடும், இஸ்லாமியர்கள் 14.2 விழுக்காடும் உள்ளனர்.
மோடிக்கு முன்பு, இந்தியப் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ஐ.கே குஜ்ரால், வாஜ்பாய் ஆகியோர் வாடிக்கனில் போப் ஆண்டவரை சந்தித்துள்ளனர்.

தொடர்ந்து, ஜி20 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியை, இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி வரவேற்றார். இருவரும், நேற்று சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரையும் மோடி சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil