ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது முஸ்லீகளை குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மோடியின் கருத்துக்கு பா.ஜ.க பிகானீர் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்த உஸ்மான் கனி விமர்சனம் செய்தார். கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் மீது போலீசார் "அமைதி மீறல்" குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிகானீர் போலீசார் அவரை நேற்று (சனிக்கிழமை) தடுப்பு காவலில் வைத்தனர்.
முக்தா பிரசாத் நகர் காவல் நிலையத்தின் எஸ்.ஹெச்.ஓ., திரேந்திர ஷெகாவத் கூறுகையில், “இரண்டு மூன்று நாட்களுக்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, கனி இன்று (சனிக்கிழமை) மதியம் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அவர் (பிரதமருக்கு எதிராக) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் டெல்லியில் இருந்தார், இன்று அவர் (காவல் நிலையத்திற்கு) வந்து, அவருடைய வீட்டிற்கு வாகனத்தை அனுப்ப எவ்வளவு தைரியம் என்று எங்களிடம் கேட்டார்”.
“அவர் யாரென்று கூட எங்களுக்குத் தெரியாது. காவல் நிலையத்திற்கு முன் முற்றுகை நடத்தப்பட்டது, அங்கு அவர் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட முயன்றார். அங்கு அவர் நாடகம் ஆடினார், அதனால் அவரை லாக்அப்பில் அடைத்து வைத்தோம்" என்று எஸ்.ஹெச்.ஓ கூறினார். பொது அமைதியை மீறியதற்காக சட்டப் பிரிவு 151 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
"அவர் தற்போது லாக்அப்பில் உள்ளார். அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்துவோம். மேலும் அமைதியை பேண அவரை 6 மாதங்களுக்கு தடுத்து வைப்போம் ” என்று போலீசார் கூறினர்.
முதலில் அவரது வீட்டிற்கு வாகனம் அனுப்பப்பட்டது ஏன் என்பதற்கு போலீசார் விளக்கமளிக்கவில்லை. தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ராதேஷ்யாம், காவல்நிலையத்தில் கூறுகையில், "அவர் (கனி) சில கருத்துகளை தெரிவித்திருந்தார்... அவரது வீடியோ வைரலாகிவிட்டது, அதனால் CrPC 151-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.
நியூஸ் 24 செய்தியாளரிடம் பேசிய கனி, ஒரு முஸ்லீம் என்பதால், பிரதமர் கூறிய கருத்தால் ஏமாற்றம் அடைந்தேன் என்று கூறியிருந்தார். மற்றவற்றுடன், பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க கூறி முஸ்லீம் மக்களிடம் நான் செல்லும்போது, அந்த சமூக மக்கள் பிரதமரின் கருத்துக்களுக்கு பதில் கேட்கிறார்கள் என்றும் கனி கூறியிருந்தார்.
ஏப்ரல் 21-ம் தேதி ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து கருத்து கூறினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ராஜஸ்தான் மாநில சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்த உஸ்மான் கனி மோடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து மாநில பாஜகவின் ஒழுங்குமுறைக் குழுத் தலைவர் ஓன்கர் சிங் லகாவத், கனி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்.
அவரை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். லகாவத்தின் கூற்றுப்படி, "மின்னணு ஊடகங்கள் மூலம் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, அதன் பிறகு கட்சி உஸ்மான் கனியின் இந்த செயலை ஒழுக்க மீறல் எனக் கண்டறிந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்குகிறது." என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/days-after-he-criticised-pm-modis-comments-police-detain-ex-head-of-bjps-bikaner-minority-cell-9294288/
பாஜகவின் சிறுபான்மை மோர்ச்சாவின் மாநிலத் தலைவர் ஹமீத் கான் மேவதி கூறுகையில், கட்சிக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தவறாக பேசியதால், கட்சி எல்லையை மீறியதாக அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
கனி சுமார் 15-20 ஆண்டுகளாக ஏபிவிபி மற்றும் பிஜேபியுடன் தொடர்பு கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு, 2023 சட்டமன்றத் தேர்தலின் போது மோடி மாவட்டத்திற்கு வந்தபோது, பிகானேர் விமான நிலையத்தில் பிரதமரை அவர் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“