/indian-express-tamil/media/media_files/2025/06/12/6tWiRn51mwbdEeltur6D.jpg)
'வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் நொறுங்கியது'.. விமான விபத்து குறித்து பிரதமர் மோடி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர். விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 130 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமான விபத்து என்பதால் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி விபத்து பற்றி எக்ஸ் பக்கத்தில், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்த விபத்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது நினைவுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
The tragedy in Ahmedabad has stunned and saddened us. It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with Ministers and authorities who are working to assist those affected.
— Narendra Modi (@narendramodi) June 12, 2025
குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு என்று குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தேசம் துணை நிற்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி: அகமதாபாத் விமான விபத்து இதயத்தை நொறுக்கியுள்ளது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. இந்த கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளன. அரசு நிர்வாகத்தின் அவசரகால மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா: அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்தேன். பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாக விரைந்துள்ளனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் பேசினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்: அகமதாபாத்தில் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா போயிங் விமானம் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணம் முழுவதும் விமானத்தில் பயணித்தவர்களின் குடுமபத்தினருடனே உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என நம்புகிறேன்.என தெரிவித்துள்ளார்.
அகமதமாபாத் விமான விபத்து: தலைவர்கள் வேதனை
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாயு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர்: பிரிட்டனைச் சேர்ந்த பலருடன் இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலை குறித்து எனக்கு தொடர்ந்து தகவல்கள் அளித்து வருகின்றனர். இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர்: இங்கிலாந்து நாட்டவர்கள் பலரை ஏற்றிக்கொண்டு லண்டனுக்கு புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன. அங்குள்ள நிலைமை குறித்து எனக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்: அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தின் துயரமான விளைவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும் என்று புதின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸி. பிரதமர் ஆண்டனி அல்பனீசி: அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய செய்தி முற்றிலும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், ஆஸ்திரேலியாவின் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளன. எங்கள் அரசாங்கம் தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருகிறது, நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்: இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள், பதிவக அதிகாரிகளுடன் இணைந்து அறிக்கை மூலம் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். "இந்தியத் தலைமை நீதிபதி, அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இக்கட்டான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன. அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவில் வலிமையையும் ஆறுதலையும் பெறட்டும்" என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.