/indian-express-tamil/media/media_files/2025/09/01/modi-raises-pahalgam-2025-09-01-13-06-13.jpg)
வெளிப்படையாக தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை எப்படி ஏற்க முடியும்? பாக்., பிரதமரை விளாசிய மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது SCO அமைப்பை பாதுகாப்பு (Security), இணைப்பு (Connectivity) மற்றும் வாய்ப்பு (Opportunity) என மறுவரையறை செய்தார். கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளையும், பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களையும் இழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை சுட்டிக்காட்டிய மோடி, “இந்த நேரத்தில் நமக்கு ஆதரவாக நின்ற நட்பு நாடுகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்தத் தாக்குதல் இந்தியாவின் ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மனிதநேயத்தை நம்புபவர்களுக்கு விடப்பட்ட சவாலும் கூட” என்றார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கலந்துகொண்டிருந்தார். இந்த அமர்வுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமை தாங்கினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் சில நாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய மோடி, “சில நாடுகள் வெளிப்படையாகத் தீவிரவாதத்தை ஆதரிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? தீவிரவாதத்தின் விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்பதை நாம் தெளிவாக சொல்ல வேண்டும். தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நாம் எதிர்க்க வேண்டும். இது மனிதகுலத்திற்கு நமது கடமை” என்று பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடினார்.
இணைப்பு மற்றும் வாய்ப்பு
இணைப்பு பற்றி பேசிய அவர், “வலிமையான இணைப்பு என்பது வர்த்தகத்திற்கு மட்டுமல்ல, அது நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கும் கதவுகளைத் திறக்கிறது என்று இந்தியா எப்போதும் நம்புகிறது” என்றார். இந்தக் கருத்தின் அடிப்படையில், இந்தியா சபஹார் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் ஆகியவற்றில் பணியாற்றி வருவதாகவும், இது ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவுக்கான அணுகலை எளிதாக்கும் என்றும் தெரிவித்தார். சீன அதிபர் ஜி-யின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்து மறைமுகமாகப் பேசிய மோடி, இணைப்பு முயற்சிகள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “இறையாண்மையை புறக்கணிக்கும் இணைப்பு அதன் நம்பிக்கையையும், அர்த்தத்தையும் இழக்கிறது” என்று அவர் புதிய கோணத்தில் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் “ஒத்துழைப்பு மற்றும் சீர்திருத்தம்” செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், 2023-ல் இந்தியாவின் SCO தலைமைத்துவத்தின் கீழ், புதுமை, பாரம்பரிய மருத்துவம், இளைஞர் மேம்பாடு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் பௌத்த பாரம்பரியம் போன்ற புதிய ஒத்துழைப்புத் துறைகளை முன்மொழிந்ததாகத் தெரிவித்தார்.
மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த, SCO-வின் கீழ் ஒரு நாகரிக உரையாடல் மன்றத்தை அமைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பண்டைய கலாசாரங்கள், கலை, இலக்கியம், பாரம்பரியம் குறித்து உலக அரங்கில் விவாதிக்க முடியும் என்றும் மோடி முன்மொழிந்தார். தங்கள் அரசாங்கம் பின்பற்றும் “சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்” என்ற மந்திரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். SCO நாடுகள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் சேர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, மாநாட்டுக்கு வந்தபோது பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரைச் சந்தித்து சுருக்கமாகப் பேசினார். அமெரிக்கா, குறிப்பாக வெள்ளை மாளிகையின் வர்த்தகத் தூதர் பீட்டர் நவாரோ, இந்தியா சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைவதை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மோடி-ஜி ஜின்பிங் இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு, இந்தியா வெளியிட்ட அறிக்கையில், உறவுகளை “மூன்றாம் நாட்டின் கண்ணோட்டத்தின் மூலம் பார்க்கக்கூடாது” என்று கூறி, “தனித்துவமான சுயாட்சி”யை நிலைநிறுத்தியது. மோடி ரஷ்ய அதிபர் புடின் உடன் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.