/indian-express-tamil/media/media_files/2025/05/13/6dpKzsd3kM4rzqknGExx.jpg)
ஆபரேஷன் சிந்தூா், பாக்., எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து உரையாற்றிய பிரதமா் மோடி!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதத்தை தடுக்க இந்தியா புதிய எல்லைகளை வகுத்துள்ளது என்றார். மேலும், தாக்குதலில் பாகிஸ்தான் சேதமடைந்த பின் உலக நாடுகளிடம் முறையிட்டதால், ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதாகவும், பாகிஸ்தானின் செயல்பாடுகளை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
"நாம் ஒரு புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளோம். 'ஆபரேஷன் சிந்துர்' என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான நமது கொள்கை. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து துளிர்க்கின்றனவோ, அந்த இடங்கள் அனைத்திலும் நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தையும், பயங்கரவாத அமைப்புகளையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம்" என்று மோடி கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: PM Modi says India won’t accept nuclear blackmail
இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதாக கூறிய மோடி, இந்த சூழலில் அவர்கள் மற்றொரு தவறான முயற்சியை மேற்கொண்டனர் என்று குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக, நமது பள்ளிகள், கோயில்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் இராணுவ நிறுவுதல்களைத் தாக்கத் தொடங்கினர். ஆனால், அது அம்பலமானது. நமது வலுவான வான் பாதுகாப்பு அமைப்பின் முன் அவர்களின் ட்ரோன்களும் ஏவுகணைகளும் எப்படி தகர்க்கப்பட்டன என்பதை உலகம் பார்த்தது. பாகிஸ்தான் எல்லைத் தாக்குதலுக்கு தயாராக இருந்தது, ஆனால் நாம் அவர்களின் நெஞ்சில் தாக்கினோம். அவர்களின் பெருமைக்குரிய பாகிஸ்தான் விமான தளங்களை நமது ஏவுகணைகளும் ட்ரோன்களும் சேதப்படுத்தின. 3 நாட்களில், பாகிஸ்தான் எதிர்பார்க்காத அளவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது என்று மோடி கூறினார். எனவே, பதற்றத்தை குறைக்க பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கெஞ்சியது. அதற்குள், அவர்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் சேதப்படுத்தினோம். அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்து நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்று பிரதமா் மோடி கூறினாா்.
நேற்று புத்த பூர்ணிமா என்பதை நினைவுகூர்ந்த மோடி, புத்தர் உலகிற்கு அமைதிக்கான வழியைக் காட்டியதாகக் கூறினார். "நான் உலகிற்குச் சொல்கிறேன், நாம் பாகிஸ்தானுடன் பேசினால், பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசுவோம். இன்று புத்த பூர்ணிமா. புத்தர் நமக்கு அமைதியின் வழியைக் காட்டினார்.
"நமது இராணுவம், விமானப்படை, கடற்படை, எல்லை பாதுகாப்புப் படை மற்றும் துணை இராணுவப் படைகள் தொடர்ந்து விழிப்புடன் உள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய காட்சியை நாம் பார்த்தோம். நமது குடிமக்களைப் பாதுகாக்க நாம் செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு முறையும் போர்க்களத்தில் பாக்., தோற்கடித்துள்ளோம். மேலும் 'ஆபரேஷன் சிந்துர்' மூலம் ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளோம்," என்று மோடி கூறினார்.
"இன்றைய காலகட்டம் போருக்கான காலம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இது பயங்கரவாதத்தின் காலமும் இல்லை. பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் ஊக்குவிக்கும் பயங்கரவாதம், ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும். அவர்கள் தங்கள் பயங்கரவாத கட்டமைப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் வியாபாரமும் ஒரு சேர இருக்க முடியாது. தண்ணீரும் இரத்தமும் ஒருசேர ஓட முடியாது” என்றார்.
நாட்டின் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு வீரர்களின் செயல்களை அர்ப்பணித்து, ஆயுதப் படைகளின் வீரத்தை மோடி பாராட்டினார். "நமது நாட்டின் துணிச்சலான இராணுவம் மற்றும் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு எனது வணக்கம். ஆபரேஷன் சிந்துரில் நமது வீரர்கள் வீரத்தைக் காட்டினர். நமது நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் மகள்களுக்கும் நமது வீரர்களின் வீரத்தை அர்ப்பணிக்கிறேன். பஹல்காம் தாக்குதலால் உலகம் அதிர்ச்சியடைந்தது. குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் முன் மக்களின் மதத்தை கேட்டு, பின்னர் அவர்களை கொன்றனர். இது நாட்டின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சி," என்று அவர் கூறினார். பயங்கரவாதத்தை அழிக்க ஆயுதப் படைகளுக்கு அரசாங்கம் முழு சுதந்திரம் அளித்ததும் இதன்பிறகுதான் என்றார். "இன்று, நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் நெற்றியில் இருந்து சிந்துரை அகற்ற எந்த முயற்சி செய்தாலும் அதன் விளைவுகளை ஒவ்வொரு பயங்கரவாத அமைப்பும் அறியும். 'ஆபரேஷன் சிந்துர்' என்பது நீதிக்கான உறுதிமொழி" என்று மோடி கூறினார்.
"பாகிஸ்தானின் முரிட்கே, பஹவல்பூரில் அமைந்திருந்த பயங்கரவாத மையங்கள், உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலை கழகங்களாக செயல்பட்டு வந்தன. இவைதான் பல உலகளாவிய பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக இருந்தன," என்று மோடி குறிப்பிட்டார். ஒரே தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்தியா அழித்தது என்று மோடி குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.