பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக கணக்குகளை ஒப்படைத்ததைத் தொடர்ந்து, அதில் சாதனை படைத்த பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தன்று தங்கள் வாழ்க்கைக் கதைகளை பொது மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் காலையில் வாழ்த்துகளைத் தெரிவிக்கையில், “நம்முடைய பெண் சக்தியின் வலிமை மற்றும் சாதனைகளுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னது போல், சமூக ஊடகங்களில் இருந்து நான் வெளியேறுகிறேன். நாள் முழுவதும், ஏழு பெண்கள் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். மேலும், எனது சமூக ஊடகக் கணக்குகள் மூலம் உங்களுடன் அவர்கள் உரையாடுவார்கள்.” என்று தெரிவித்தார்.
சாதனைப் பெண்கள்:
சினேகா மோகன்தாஸ், ஃபுட் பேங்க் இந்தியா நிறுவனர்
பிரதமர் மோடியின் சமூக ஊடகக் கணக்கை முதலில் சென்னையைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் நிர்வகித்தார். இவர், லாப நோக்கற்ற ஃபுட் இந்தியா நிறுவனத்தி நிறுவனர். பசியை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கான தனது பயணத்தில் குறைந்தது ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும் என்றும் உணவு வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
மேலும், அவர் “வீடற்றவர்களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள தனது தாயால் ஈர்க்கப்பட்டு, பின்னர் ஃபுட் பேங்க் இந்தியா என்ற அறக்கட்டளையை தொடங்கினேன்” என்று கூறினார்.
மால்விகா ஐயர், குண்டு வெடிப்பில் இருந்து தப்பியவர் மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்
பிரதமர் மோடியின் சமூக ஊடகக் கணக்கை இரண்டாவதாக நிர்வகித்தவர் மால்விகா ஐயர். 13 வயதில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பினார். குண்டுவெடிப்பு அவரது கைகளையும் கால்களையும் சேதப்படுத்திய போதிலும் அவர் பி.எச்டி படித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஒரு மாற்றுத்திறாளிகள் செயற்பாட்டாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர். மால்விகா பிரதமரின் டுவிட்டர் பக்கத்தில், “விட்டுக்கொடுப்பது ஒருபோதும் ஒரு தேர்வு அல்ல. உங்கள் எல்லைகளை மறந்து, நம்பிக்கையுடனும் உறுதியுடனும் உலகைப் எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறினார்.
மால்விகா ஐயரைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்வது என்பது ஒருவர் தனக்குத் தரக்கூடிய மிகப்பெரிய வெகுமதியாகும். “ நம்முடைய வாழ்க்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால்,. வாழ்க்கையை நோக்கிய நமது அணுகுமுறையை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். நாள் முடிவில், நம்முடைய எதிர்ப்புகளில் இருந்து நாம் எவ்வாறு தப்பிக்கிறோம் என்பதுதான் முக்கியமானது” என்று அவர் குறிப்பிட்டுள்லார். மகளிர் தினத்தில் தனது கருத்துக்களை தெரிவிக்க பிரதமரின் முடிவால் ஈர்க்கப்பட்ட அவர், இயலாமை தொடர்பான பழைய மூடநம்பிக்கைகளை அகற்றுவதில் இந்தியா சரியான பாதையில் முன்னேறி வருகிறது என இப்போது நம்புவதாகக் கூறினார்.
அரிஃபா, காஷ்மீரைச் சேர்ந்த ஒரு கைவினைக் கலைஞர்
மகளிர் கைவினைஞர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்காக உழைத்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த கைவினைக் கலைஞரான அரிஃபா, பிரதமரின் செயல் தனது மன உறுதியை உயர்த்தியுள்ளது என்றார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயல் எனது மன உறுதியை உயர்த்தியுள்ளது. மேலும், இது கைவினை மற்றும் காஷ்மீர் முழுவதிலும் உள்ள கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காக கடினமாக உழைக்க எனக்கு உதவும்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பெண்கள் சுதந்திரமாக மாறுவது முக்கியம் என்று தான் நினைக்கிறேன் என்று கூறினார்.
கல்பனா ரமேஷ், தண்ணீர் போராளி
பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நான்காவதாக டுவிட் செய்த சாதனைப் பெண் கல்பனா ரமேஷ், நீர் பாதுகாப்பு குறித்த ஒரு சக்திவாய்ந்த செய்தியை மக்கள் பொறுப்புடன் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தினார்.
இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர். மழைநீர் சேகரிப்பு மூலம் நீர் பாதுகாப்பை ஆதரிக்கும் அவர், “ஒரு போர் வீரராக இருங்கள், ஆனால், வேறு வகையானவராக இருங்கள்! நீர் போர்வீரராக இருங்கள். ” அடுத்த தலைமுறையினருக்கு நீர் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் கூட்டாக செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.
விஜயா பவார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்
விஜயா பவார் கிராமப்புற மத்திய பிரதேசத்தின் பஞ்சாரா சமூகத்தின் கலையை ஆயிரக்கணக்கான பிற பெண்களின் உதவியுடன் ஊக்குவிக்கும் மற்றொரு கைவினைக் கலைஞர்.
கலையைப் பாதுகாப்பதில் தான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மகளிர் தினத்தையொட்டி பெருமைப்படுவதாகவும் கூறிய பவார், பிரதமர் மோடி தஙக்ளை ஊக்குவித்தது மட்டுமல்லாமல், தங்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கினார் என்று பாராட்டினார்.
தனது கணக்குகளில் இருந்து வெளியேறும்போது, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை காலை உலகெங்கிலும் உள்ள இந்திய பெண்கள் சாதனையாளர்களைப் பாராட்டினார், அவர்களின் போராட்டங்களும் அபிலாஷைகளும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன என்று கூறினார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறந்த பெண்கள் சாதனையாளர்களை இந்தியா கொண்டுள்ளது. “இந்த பெண்கள் பரந்த அளவிலான துறைகளில் சிறந்த பணிகளைச் செய்துள்ளனர். அவர்களின் போராட்டங்களும் அபிலாஷைகளும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன. அத்தகைய பெண்களின் சாதனைகளை கொண்டாடி, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம். #SheInspiresUs” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.