/tamil-ie/media/media_files/uploads/2022/05/modi-macron-1.jpg)
PM discusses Ukraine with Nordic leaders, meets Macron in Paris: நார்டிக் நாடுகளுடனான "சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு" ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நிலைமை குறித்து டென்மார்க், சுவீடன், பின்லாந்து, நார்வே மற்றும் ஐஸ்லாந்து பிரதமர்களுடன் கோபன்ஹேகனில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் விவாதித்தார்.
கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலையில், ஒத்துழைப்புக்கு இந்த நாடுகள் முன்னுரிமை அளித்துள்ள நிலையில், “இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை திறம்பட வழங்குவதற்கும் கண்காணிப்பதற்கும் இந்தியா தகவல் தொழில்நுட்ப தளங்களை எவ்வாறு பயன்படுத்தியது” என்பதை மோடி எடுத்துரைத்தார். மேலும், "மனிதனை மையமாகக் கொண்ட தொழில்நுட்பத்தின்" அவசியத்தை வலியுறுத்திய மோடி, "இத்தகைய தளங்கள் இயற்கையான உலகளாவிய நன்மை" என்பது இந்தியாவின் நம்பிக்கை என்று நார்டிக் தலைவர்களிடம் கூறினார்.
நார்டிக் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு நார்டிக் நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்ல வழிவகுக்கும். ஒன்றாக, நமது நாடுகள் உலக செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை அடைய மற்றும் பங்களிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.
மாநாட்டிற்கு பின்னர், மோடி பாரீஸ் சென்று அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு அவர் இந்தியா திரும்புவார்.
கோபன்ஹேகனில், வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா, இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார், அப்போது, "தலைவர்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய நலன்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், அதில் இயல்பாகவே உக்ரைன் விவகாரமும் அடங்கும்." என்று கூறினார். மேலும், இந்தோ-பசிபிக் விவகாரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இவை உச்சிமாநாடு மற்றும் இருதரப்பு சந்திப்புகளுக்கு பின்னர் வெளிவந்த தகவல்கள் ஆகும்.
மேலும், "நார்டிக் நாடுகளும் இந்தியாவும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு ஆகியவற்றின் மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டன, மேலும் பல்வேறு அரசியல் விஷயங்களில் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றன," என்றும் வினய் மோகன் கூறினார்.
பின்லாந்தின் சன்னா மரின், நார்வேயின் ஜோனாஸ் கர் ஸ்டோர், ஸ்வீடனின் மக்டலினா ஆண்டர்சன், ஐஸ்லாந்தின் கேட்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர் மற்றும் டென்மார்க்கின் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோருடன் மோடி உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.
ஜெர்மனி மற்றும் டென்மார்க்குடனான கூட்டு அறிக்கைகளைப் போலவே, நார்டிக் பிரதமர்கள் "ரஷ்யப் படைகளால் உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத மற்றும் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு தங்கள் வலுவான கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தினர்" என்று கூட்டு அறிக்கை கூறியது. கூட்டறிக்கையில் ஒரு தரப்பின் கருத்தை வெளிப்படுத்தும் ஒருதலைப்பட்ச அறிக்கை அசாதாரணமானது மற்றும் இரு தரப்பு கருத்துக்களில் உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கிறது. ஆனால் ஒருங்கிணைப்பைக் காட்ட போதுமான வரிகள் இருந்தன.
கூட்டறிக்கையில், “உக்ரைனில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரதமர்கள் தங்கள் தீவிர கவலையை வெளிப்படுத்தினர். அவர்கள் உக்ரைனில் பொதுமக்கள் இறப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர். போர்களை உடனடியாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். சமகால உலகளாவிய ஒழுங்கு ஐநா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் இறையாண்மை மற்றும் மாநிலங்களின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் உக்ரைனில் உள்ள மோதலின் சீர்குலைக்கும் விளைவு மற்றும் அதன் பரந்த பிராந்திய மற்றும் உலகளாவிய தாக்கங்கள் பற்றி விவாதித்தனர். இரு தரப்பினரும் இந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.
“கடந்த 75 ஆண்டுகால இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பயணத்தில் நார்டிக் நாடுகளை நம்பகமான நண்பர்களாக பிரதமர் மோடி பாராட்டினார்” என்று வினய் மோகன் கூறினார்.
நார்டிக் நாடுகளுடனான ஒத்துழைப்பின் அம்சங்களான "நகர்ப்புற புதுப்பித்தல், நதிகளை சுத்தம் செய்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் திறன் மேம்பாடு போன்ற இந்தியாவின் வளர்ச்சி முன்னுரிமைகளை" மோடி சுட்டிக்காட்டினார்.
”இந்தியா 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், பல நாடுகளுடன் இணைந்து, அவர்களின் திறனை வளர்ப்பதிலும் பங்கேற்றது” என்று மோடி நார்டிக் தலைவர்களிடம் கூறினார். தடுப்பூசிகள் கிடைக்கும் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் உலகளாவிய தடுப்பூசி உற்பத்திக்கு தற்காலிக TRIPS விலக்கு தேவை என்றும் மோடி கூறினார்.
காலநிலை, நிலையான வளர்ச்சி மற்றும் நீலப் பொருளாதாரம் குறித்து, நிலையான, சுத்தமான மற்றும் பசுமையான வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். தலைவர்களின் "உரையாடல்கள் காலநிலை தழுவல் மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் தெளிவாக வெளிப்படுத்தின" என்று வினய் மோகன் குவாத்ரா கூறினார்.
புதுமைகள் குறித்து கூறிய வெளியுறவுச் செயலர் வினய் மோகன், இது "இந்தியா-நார்டிக் கூட்டாண்மையின் மிகவும் வலுவான பகுதி" என்றும், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
செவ்வாயன்று டென்மார்க்கின் மெட்டே ஃபிரடெரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர், மற்ற நார்டிக் நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தினார்:
* பின்லாந்தின் சன்னா மரினுடன்: "செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங், எதிர்கால மொபைல் தொழில்நுட்பங்கள், சுத்தமான தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் கட்டங்கள் போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி அவர்கள் விவாதித்தனர்," என்ற வெளியுறவுத்துறை கூறியது. இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேரவும், குறிப்பாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றங்களில் இந்திய சந்தை அளிக்கும் மகத்தான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பின்லாந்து நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
* நார்வேயின் ஜோனாஸ் கர் ஸ்டோருடன்: நீலப் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, க்ரீன் ஹைட்ரஜன், சூரிய மற்றும் காற்று மின் திட்டங்கள், பசுமைக் கப்பல் போக்குவரத்து, மீன்வளம், நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, நீண்ட கால உள்கட்டமைப்பு முதலீடு, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் செயல்பாடுகளை ஆழமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர்கள் விவாதித்தனர்.
இதையும் படியுங்கள்: போர் முடிவுக்கு வர ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தும் என நம்புகிறேன் – டென்மார்க் பிரதமர்
* ஸ்வீடனைச் சேர்ந்த மாக்டலேனா ஆண்டர்சனுடன்: “லீட் ஐடி (LeadIT) முயற்சியால் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தியை வெளிப்படுத்தினர். 2019 செப்டம்பரில் ஐநா காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில், குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி, உலகின் மிக அதிகமான பசுமைக்குடில் வாயுவை (GHG) உமிழும் தொழில்களை வழிநடத்த உதவும் வகையில், 2019 செப்டம்பரில், தொழில் மாற்றம் குறித்த தலைமைக் குழுவை (LeadIT) அமைப்பதற்கான இந்தியா-ஸ்வீடன் கூட்டு உலகளாவிய முயற்சி இதுவாகும். அதன் உறுப்பினர் எண்ணிக்கை இப்போது 16 நாடுகள் மற்றும் 19 நிறுவனங்களுடன் 35 ஆக அதிகரித்துள்ளது” என்று வெளியுறவுத்துறை கூறியது. "புதுமை, காலநிலை தொழில்நுட்பம், காலநிலை நடவடிக்கை, பசுமை ஹைட்ரஜன், விண்வெளி, பாதுகாப்பு, சிவில் விமான போக்குவரத்து, ஆர்க்டிக், துருவ ஆராய்ச்சி, நிலையான சுரங்கம் மற்றும் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்."
* ஐஸ்லாந்தின் கேட்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர் உடன்: தலைவர்கள் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர், குறிப்பாக புவிவெப்ப ஆற்றல், நீல பொருளாதாரம், ஆர்க்டிக், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மீன்வளம், உணவு பதப்படுத்துதல், டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி, மற்றும் கலாச்சாரம். "புவிவெப்ப ஆற்றல், குறிப்பாக, ஐஸ்லாந்து சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஒரு பகுதியாகும், மேலும் இந்த துறையில் இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை இரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்" என்று வெளியுறவுத்துறை கூறியது. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஜாகோப்ஸ்டோட்டிரின் தனிப்பட்ட முயற்சிகளை மோடி பாராட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.