முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் அரசு கூறுகிறது, காங்கிரஸ் அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கு செல்வத்தைப் பங்கிடுவார்கள் என்று ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Congress govt used to say Muslims have first right to wealth… they will distribute wealth to those with more children: PM Modi in Rajasthan
பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டார், “மரியாதைக்காக, அவர் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார் - அவர் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பது உண்மைதான் - ஆனால், நீங்கள் அவரை மீண்டும் ராஜஸ்தானில் பார்த்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாக்களித்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்கள் மற்றும் அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “முன்னதாக, அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறினார்கள். இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு, ஊடுருவல் செய்பவர்களுக்கு விநியோகிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. சகோதர சகோதரிகளே, இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை எனது தாய் மற்றும் சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது.” என்று கூறினார்.
2006-ல், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், “சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.” என்று கூறினார்.
ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி பொய்களைப் பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் காங்கிரஸ் அச்சத்தை உருவாக்குகிறது” என்றும் மோடி கூறினார்.
“சில நேரங்களில் அவர்கள் பழங்குடியினர் அல்லது தலித்துகள் அல்லது சிறுபான்மையினரிடம் அச்சத்தை உருவாக்குகிறார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் சாசனம் அல்லது இடஒதுக்கீடு குறித்த பொய்களைப் பரப்பி வருகின்றனர். பழங்குடியினர் தங்கள் உரிமைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள் என்பதால், அவர்களின் பொய்கள் வேலை செய்யாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக ஜாலோரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்களை ராஜ்யசபாவுக்கு அனுப்ப காங்கிரஸ் ராஜஸ்தானைப் பயன்படுத்துகிறது என்று மோடி கூறினார்.
தென்னிந்தியாவில் இருந்து ஒரு தலைவரை ராஜஸ்தானில் இருந்து மேலவைக்கு காங்கிரஸ் அனுப்பியதை சுட்டிக்காட்டிய மோடி, “அவர் ஒருமுறையாவது ராஜஸ்தான் பற்றி பேசியிருக்கிறாரா?” என்று கேட்டார். கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் 2020-ல் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் குறிப்பிட்டார், “மரியாதைக்காக, அவர் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார் - அவர் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பது உண்மைதான் - ஆனால் நீங்கள் அவரை மீண்டும் ராஜஸ்தானில் பார்த்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
“இப்போது, ராஜஸ்தான் மக்கள் மற்றொரு தலைவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். தேர்தலில் போட்டியிடவோ, வெற்றி பெறவோ முடியாதவர்கள், களத்தை விட்டு ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு வந்துள்ளனர்” என்று மோடி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸால் இப்போது 300 தொகுதிகளில் போட்டியிட முடியாது என்றும் மோடி கூறினார். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறிய அவர், அது வேகமெடுக்கும் முன்பே சக்தியை இழந்துவிட்டது என்றார்.
ராஜஸ்தானில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் ஜலோர் மற்றும் பன்ஸ்வாரா ஆகியவற்றில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் உள்ள மற்ற 12 தொகுதிகள் ஏற்கனவே முதல் கட்டத் தேர்தலில் - ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராஜஸ்தான் மக்கள் முதற்கட்டமாக காங்கிரசுக்கு பாடம் புகட்டியுள்ளனர் என்றார் மோடி. “முதல் கட்டத்தில், ராஜஸ்தானில் பாதி காங்கிரஸைத் தண்டித்து, பாடம் புகட்டியுள்ளது. தேசபக்தி நிறைந்த ராஜஸ்தானுக்கு காங்கிரஸால் ஒருபோதும் வலிமையான பாரதத்தை உருவாக்க முடியாது என்பது தெரியும். காங்கிரஸ் ஆட்சியை நாடு விரும்பவில்லை. 2014-க்கு முந்தைய நிலை திரும்புவதை நாடு விரும்பவில்லை. பலவீனமான காங்கிரஸ் அரசை அனைவரும் மிரட்டி, நாட்டைக் கொள்ளையடிப்பதில் மும்முரமாக இருந்தனர். பிரதமரை யாரும் கேட்கக்கூட இல்லை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அரசு இயங்கி வந்தது,” என்றார்.
குறிப்பாக ராஜஸ்தானில் தனது அரசாங்கத்தின் சாதனைகளை எடுத்துரைத்த மோடி, அம்மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஏழை, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு பக்கா வீடுகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 1 லட்சம் வீடுகள் ஜலோர் மற்றும் சிரோஹியில் கட்டப்பட்டுள்ளன என்று கூறினார்.
ஜலோர் தொகுதியில் பா.ஜ.க-வின் லும்பரம் சவுத்ரியை எதிர்த்து, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜ.க-வின் தேவ்ஜி படேல் இந்த தொகுதியின் சிட்டிங் எம்.பி-யாக உள்ளார்.
பன்ஸ்வாராவில் பாஜகவின் மகேந்திர சிங் மாளவியா, காங்கிரஸின் அரவிந்த் தாமோரை எதிர்கொள்கிறார். இந்த தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க-வின் கனக் மல் கட்டாரா உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“