புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலாகோட்டின், மலை உச்சியின் மீதுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்திருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்திய விமானப் படையின் இந்த அதிரடித் தாக்குதலை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "உலகத்தை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை எதிர்த்து, அதை வேரோடு அழிப்பதற்கு எடுத்திடும் நடவடிக்கைகளில் வெற்றிகள் பல கண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக, இன்றைய தினம் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டு, பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இந்திய விமானப்படையின் பைலட்களுக்கு எனது சல்யூய்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தனது ட்விட்டரில், "IAF என்றால் 'இந்தியாவின் வியக்கத்தக்க படை'.... ஜெயஹிந்த்" என்று புழந்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த முகாம்களை துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்த வீரம்மிக்க நமது இந்திய வான் படைக்கு எனது சல்யூட்" என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இந்திய விமானப்படையின் வீரதீர செயலுக்கு பெருமைப்படுகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், "வீரமிகு இந்தியா" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டரில், "சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்" என்று வீரர்களை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.
"பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு 12 விமானங்களும் பத்திரமாக வீடு திரும்பியது. இந்தியா தனது நாயகர்களை நினைத்து பெருமை கொள்கிறது" என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.