புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.
இதில் பேசிய அவர், வெப்ப அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவை இல்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் வசதிக்கேற்ப மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் மற்றும் தனி அறைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அக்னி நட்சத்திரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், அனைத்து ஆம்புலன்ஸ்களையும் தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம்.
மின்சாரம், தீயணைப்பு உள்ளிட்ட துறைகள் ஒன்றிணைந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவமனைகளில் கருவுற்ற தாய்மார்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், அவர்களின் வீடுகளுக்கு சென்று முதலுதவி அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை மூலம் பிராணிகள், பறவைகளுக்கும் குடிநீர், மருத்துவ வசதி செய்ய வேணடும். மேலும், போலீசாருக்கும் மருத்துவ உதவி மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி