/indian-express-tamil/media/media_files/2025/06/14/FFG86DV7Ns46OkoweHoF.jpg)
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ரங்கசாமி ஆட்சியில் போராட்டம் நடத்தினால்தான் கோரிக்கைகளை பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் முதல் மின்துறை ஊழியர்கள் வரை அனைத்துத் துறை ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த அரசு போராட்டங்களை சந்திக்கிற அரசாகவே உள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதற்கோ அல்லது மாநில வளர்ச்சியை மேம்படுத்துவதற்கோ ரங்கசாமி அரசு எந்தவித புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அரசின் செயல்பாடுகளை உற்று நோக்கும்போது, துணைநிலை ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவது தெளிவாக தெரிகிறது. ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான இந்த கருத்து வேறுபாடு மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தாயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். கடந்த நான்கு வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி, பெண்களுக்கான சிறப்பு பேருந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையெல்லாம் செயல்படுத்தினார்களா?
"புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல் தமிழகத்தைப் பார்த்து திட்டங்கள் அறிவித்தார்கள். ஆனால், எதையும் செயல்படுத்தவில்லை. பா.ஜ.க-வுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று பா.ஜ.க தரப்பில் கூறப்படும் நிலையில், ரங்கசாமியோ அல்லது என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளோ இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்?" என்று நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.