புதுச்சேரி, உருளையான் பேட்டை, ராஜிவ் காந்தி நகரில் ஜூன் 5-ஆம் தேதி இரவு 9 மணியளவில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்தப் பகுதியில் இருந்த நாய் ஒன்றை அம்மி கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளனர். நாயின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்களை பார்த்து அந்த இளைஞர்கள் ஓடிவிட்டனர்.
உடனடியாக அந்தப் பகுதி மக்கள், நாயை மீட்டு அருகில் உள்ள புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால், நாயை அங்கேயே விட்டுச் சென்றனர்.
அடுத்த நாள் காலை வரை உயிருக்கு போராடிய அந்த நாயின் நிலைமை குறித்து, 'வாய்ஸ் ஃபார் வாய்ஸ்லெஸ்' என்ற விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த அமைப்பினர், நாயை புதுச்சேரி குரும்பாபேட்டில் உள்ள ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்குள்ள மருத்துவர்கள், நாயை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றால் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினர். அதையடுத்து, அந்த அமைப்பினர் உடனடியாக நாயை மேல் சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு சென்றனர்.
இந்தக் கொடூர செயலை செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உருளையான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெரு நாயின் உயிருக்குப் போராடும் நிலையில், அதற்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்று சிகிச்சை பார்த்து வரும் 'வாய்ஸ் ஃபார் வாய்ஸ்லெஸ்' விலங்குகள் நல அமைப்புக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.