புதுச்சேரியில் இலவச பேருந்து சேவை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு 5 வழித்தடங்களில் 11 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டு வந்தன. இதனால் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் பயனடைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம், இந்த இலவச பேருந்து சேவையை நிறுத்தி கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டில் அறிவித்தது.
அப்போது, மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதன் காரணமாக இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. அதன் பின்னர், கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதற்கடுத்து கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும், இலவச பேருந்து சேவை தொடங்கப்படவில்லை.
இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து, இலவச பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு மாணவர் பேரவை தலைவர் காயத்ரி தலைமை வகித்தார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.