ஜூலை 14ம் தேதி நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும், இனி வரும் நாட்களில், தமிழ் உட்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்படும் எனக்கூறியுள்ளார்.
தபால் துறை போட்டி தேர்வுகள், தமிழ் உட்பட, அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், தேர்வை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், தேர்வு முடிவை வெளியிட தடை விதித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை14) தேர்வு நடந்தது.
இந்நிலையில், தபால்துறையின் முடிவை கண்டித்து ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில், கடந்த 14ம் தேதி நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனிமேல், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் வரவேற்பு
பாரதிய ஜனதா : தபால் துறை அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையிலேயே தபால் துறை தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது என்றும் தற்போது அதை ரத்து செய்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தபால் துறை தேர்வு தமிழில் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல; இது பாஜக அரசு ஜனநாயக முறைப்படி நடக்கிறது என்பதை காட்டுவதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நியாயமான கோரிக்கை என்றால் அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கும் என்று தமிழிசை மேலும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் : அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும்” என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்கள் அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
தி.மு.க. வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம் - விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப்பூட்டு போடும் என்று நம்புகிறேன்.
தேமுதிக : இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட அஞ்சல் துறை தேர்வுகளை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.